
நண்பர் அஹமத் இர்ஷாத் என்னை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்திருந்தார்.
உபரியாய் ஒரு சுதந்திரமும் கொடுத்திருந்தார். எந்த தலைப்பில் வேண்டுமானாலும்
எழுதலாம். நன்றி இர்ஷாத்.
என்னை மிக மிக கவர்ந்த ஒரு புத்தகம்.
"குழந்தைகள் வாழ்க".
இது ஒரு மாஸ்கோ பதிப்பக நூல்.
ஷ.அமனஷ்வீலி எழுதியது.
அமனஷ்வீலி சோவியத் விஞ்ஞானி,மனோதத்துவ டாக்டர்,பேராசிரியர்.
முதன் முதலில் பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தரும்
முறைகளையும்,வழிகளையும் பற்றி இந்நூலில் எழுதியுள்ளார்.
இந்நூலில் வரும் முதல் வகுப்பு ஆசிரியர் தன் வகுப்பில் சேர வரும் குழந்தைகளுக்கு
பள்ளி திறக்கும் முன்பாகவே அவர்களை வரவேற்று ஒரு கடிதம் எழுதுகிறார் வாழ்த்து
அட்டையுடன்.
அவர்கள் வருவதற்கு முன்னதாகவே அக் குழந்தைகளின் பெயர்,அவ்ர்களின்
குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய தகவல், குழந்தைகளுக்குப் பிடித்த விளையாட்டு
இது மாதிரியான தகவல்கள் அனைத்தையும் சேகரித்து விடுகிறார்.
முதல் நாள் ஒவ்வொரு குழந்தையின் பெயர் சொல்லி அழைத்து
பரிசு பொருட்கள் வழங்குகிறார்.
அட்டைகள்,படங்கள்,சின்னச் சின்ன பொருட்கள் இவைகள் தான்
பாடத்தின் கரு.
குழந்தைகள் பாடுகின்றன.. ஆடுகின்றன.. விளையாடுகின்றன..
வாரம் ஒரு முறை ஒவ்வொரு குழந்தையின் வீட்டிலிருந்தும் ஒருவர்
விருந்தினராக அழைக்கப் படுகிறார். ஒரு விருந்தினர் கதை சொல்கிறார்.
மற்றவர் பாடிக்காண்பிக்கிறார்.இன்னொருவர் மேஜிக் செய்து காட்டுகிறார்.
குழந்தைகள் ஆளுக்கு ஒரு புத்ததகம் தயாரிக்கிறார்கள். அவரவர்க்குப்
பிடித்த படங்களை ஒட்டி. அந்தப் புத்தகங்களை வைத்து ஒரு சின்னஞ்சிறு
நூலகம். ஒருவர் மற்றவருக்கு உதவுவது முக்கியமான பாடம்.
இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.
ஆசிரியர் ஒரு பட்டியல் போடுகிறார்.
ஆசிரியரின் கட்டளைகள்,ஏவல்கள்களை உடனடியாக நிறைவேற்றுமாறு
குழந்தைகளைக் கட்டாயப்படுத்தலாமா? - கூடாது.
கட்டாய வீட்டுப் பாடங்களைத் தரலாமா? - கூடாது.
குழந்தைகளுக்கு மதிப்பெண்களைப் போடலாமா? - கூடாது.
வகுப்பில் யார் மற்றவரை விட நன்றாகப் படிக்கின்றனர் என்று
சொல்லலாமா? - கூடாது.
வகுப்பில் குழந்தைகள் கைகளைக் கட்டிக் கொண்டு உட்காரவேண்டும்
என்று சொல்லலாமா?- கூடாது.
குழந்தை வகுப்புக்குக் கொண்டு வந்த விளையாட்டு சாமானைப்
பிடுங்கலாமா? - கூடாது.
குழந்தையைப் பெயில் செய்யலாமா? - கூடாது.
சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டுமென குழந்தைகளிடம்
சொல்லலாமா? - கூடாது.
இந்தக் கூடாது வகையறாக்களைத் தான் நம் பள்ளிகள்
செய்து கொண்டிருக்கின்றன.
இதை நாமும் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம்.
கொஞ்சம் யோசிப்போம்.