வெள்ளி, 31 டிசம்பர், 2010



நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது.
சூடிய பூ சூடற்க சிறுகதை தொகுதிக்காக.
தாமதமாக கொடுத்தாலும் தகுதியானவருக்கே.
இவரது எழுத்துக்களில் அடிநாதமாய் ஒரு
நகைச்சுவை ஓடிக்கொண்டிருக்கும்.
இவரது எழுத்துக்களின் காதலன் நான்.




டாக்டர் பினாயக் சென்னுக்கு ராய்பூர் நீதிமன்றம்
ஆய்ள்தண்டனை விதித்திருக்கிறது. ஒரு
போலியான குற்றச்சாட்டை சொல்லி.
நக்ஸல் தீவிரவாதிகளுக்கு கடித பரிவர்த்தனை
செய்து கொடுத்ததாய். முன்பு டாக்டர் சென், வேலூர்
சிஎம்சியில் பணியாற்றியவர். இவர் செய்த
ஒரே குற்றம் அரசாங்கத்தின் வெளிச்சம்
விழாத மக்களுக்கும்,குழந்தைகளுக்கும்
மருத்துவ உதவி செய்தது மட்டும் தான்.




போனி எம் ஐ இன்னமும் ஞாபகம் வைத்திருப்பவர்கள்
பாடகர் பாபி ஃபாரெல்லை மறக்க முடியாது.
டாடி கூல் மற்றும் ரிவர்ஸ் ஆஃப் தி பாபிலோன்
இன்னமும் மனசுக்குள் அதிர்ந்து கொண்டிருக்கிறது.
பாபி நேற்று மறைந்துவிட்டார்.
அவர் குரல் என்றும் நிற்கும்.

வெள்ளி, 17 டிசம்பர், 2010

கானல் வரி



கலைவாணி என்ற தமிழ்நதி,அநேக
ஈழத்தமிழர்களைப் போல் போரினால்
கனடாவிற்குப் புலம் பெயர்ந்தவர்.
கனடாவில் வாழ்ந்த காலத்தில்
கலைவாணி இராஜகுமாரன் என்ற
பெயரில் சிறுகவிதைகள்,கவிதைகள்,
நாடகங்கள், கட்டுரைகள் ஆகிய
தளங்களில் இயங்கியவர்.
இவரின் “கானல் வரி “
மரபை மீறிய காதலின் இனிப்பையும்,
கசப்பையும் சொல்லும் பெருங்கதை
அல்லது குறு நாவல்.
இந்த “மரபை மீறிய” என்ற சொற்றொடர்
பழக்க தோஷத்தில் வந்து விழுந்து
விடுகிறது.
மாதவி என்பவர் மெளலி என்பவருக்கு
எழுதிய 60 பக்கக் கடிதமே கதை.
சமுதாயத்தால் அங்கீகரிக்கப் படாத
காதலைப் பற்றி எழுதுகிறார்.
சமுதாயத்தின் அங்கீகாரத்தை
எதிர்பார்க்காமல் எத்தனையோ
செயல்கள் தன்னிச்சையாக
நிகழ்ந்து விடுகின்றன.
அதில் இவர்களின் காதலும் ஒன்று.
இவர்களின் கதையில்
பாண்டிச்சேரி ஒரு கதாபாத்திரமாகவே
வருகிறது பாண்டிச்சேரிக்கே உரிய
அத்தனை மேன்மைகளுடனும்.
தமிழ்நதியின் எழுத்து கவிதையை
சிந்திக் கொண்டே போகிறது
செல்லும் தடமெல்லாம்.
“.... எழுத்தும்,முயக்கமும்
ஒன்றுதான். இரண்டின் முடிவிலும்
கண்சொருகும் கிறக்கமே எஞ்சுகிறது.
அமானுஷ்ய வெளியில் புகையினைப்
போல் எடையற்று மிதந்த
பரவசத்தை எத்தனை தடவை நீ
சொல்லக் கேட்டிருந்தேன்.
உடல் என்பது அற்புதங்களின்
பேழை. அதைப் பொருத்தும்
திறவுகோலால் திறக்க முடியவில்லை
எனில் இந்த வாழ்வு முற்றிலும் பாழ்.
மலையுச்சியில் மனிதக் கால்கள்
இலகுவில் சென்றடைய முடியாத
உயரத்தில் பாழடைந்து கிடந்த
கோவிலைக் கண்டுபிடித்து கண்ணீர்
வழியப் பூசிப்பது போல, நான்
தொலைத்த என்னுடலை மீண்டும்
கண்டுபிடித்துக் கொடுத்தவன்
நீதான்....”
இதனையே பிரபஞ்சன் தன் முன்னுரையில்
குறிப்பிடுகிறர்.
இணையம்,இலக்கியம் வழி சென்று
காதலாகி காமத்தினூடே
பிரிதலின் வலியை மிக
அழுத்தமாகவேச் சொல்லும்
படைப்பு இது.
வாழ்வு கை விடும்போது மரணம்
எத்தனை அழகானதாகிவிடுகிறது
என்பதனை நான் கண்டேன். மரணத்தின்
மஞ்சள் பூக்கள் தலயசைத்து என்னைக்
கூப்பிட்டன. தானாகச் சாவு வந்து
என்னைச் சேரும் வரை வாழ்ந்தே
கடக்க வேண்டிய நாட்களின் நீளம்
மூச்சு முட்டியது.
மிக வலிமையான வரிகள்.
கானல் வரி பற்றிச் சொல்ல
நிறைய விஷயங்கள் உண்டு.

இது ஒரு உயிர்மை வெளியீடு.

வியாழன், 16 டிசம்பர், 2010

ரத்த சரித்திரம்


முகத்தில் ரத்தம் தெறிக்கும் படம்.
மற்றுமொரு ராம்கோபால் வர்மா படம்.
முதல் படம் ஷிவாவில் கலக்கியது போல்
இதிலும்.
ஆந்திரா அரசியலில் எவ்வளவு ரத்தம்
கலந்துள்ளது என்பதை வெளிப்படுத்திய
படம். மிக வன்முறைப் படம் என்று
எல்லோராலும் முத்திரைக் குத்தப்பட்டாலும்
உண்மைக் கதை இதைவிட பலமடங்கு
ரத்தக் கறை படிந்தது.
பரிதலா ரவி என்பவரின் கதையை
காங்கிரஸ்,தெலுங்கு தேசம் கட்சிகள்
எப்படி புனைந்தன என்பதைப்
பார்க்கும் போது படம் உண்மைக்குத்
துரோகம் செய்யவில்லை என்றே
படுகிறது.
விவேக் ஓபராய் மிக நேர்த்தியாகச்
செய்துள்ளார்.
சாக்லேட் பையன் சூர்யா இன்னும்
போக வேண்டிய தூரம் இருக்கிறது.
அவர் இன்னமும் உக்கிரம்
பழகவில்லை.
ஓபராயின் மனைவியாக வரும்
ராதிகா ஆப்தே நடிப்பில்
மட்டுமல்ல அழகிலும் வசீகரிக்கிறார்.

திங்கள், 13 டிசம்பர், 2010

அழுகல்



உ.பி. மாநிலத்தில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான
நிலத்தை சர்க்கஸ் கம்பெனிக்கு தற்காலிகமாக
வாடகைக்கு விடுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம்
உத்திரவிட்டுள்ளது. அதனை எதிர்த்து வக்பு வாரியம்
உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருந்தது. இந்த
வழக்கை விசாரித்த நீதிபதிகள் வக்பு வாரிய நிலத்தை
சர்க்கஸ் கம்பெனிக்கு வாடகைக்கு விடுவது தொடர்பாக
அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை
ரத்து செய்தது. அத்துடன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்
அழுகிப் போன விஷயங்கள் நடப்பதாகவும் அதனை
சுத்தம் செய்யும் நேரம் வந்துவிட்டதாகவும்
குறிப்பிட்டனர். அழுகிப் போன என்ற கருத்தை நீக்க
வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் சார்பாக
உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த
மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய
வார்த்தையை திரும்ப பெற மறுத்துவிட்டது.
நிற்க.
இதற்கு முன்பாக பாபர் மசூதி இடிப்பு வழக்கில்
ஒருதலை பட்சமாக இதே அலகாபாத் நீதிமன்றம்
தீர்ப்பளித்தத்தையும் கவனத்தில் கொள்ள
வேண்டியிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்திடம் கேட்பதற்கு ஒரு கேள்வி
உண்டு.
அழுகிப்போன விஷயங்கள் நடப்பது நீதிமன்றத்தில்
மட்டும்தானா?

திங்கள், 6 டிசம்பர், 2010

THE SONG OF SPARROWS



இரானிய இயக்குனர் மஜீத் மஜீதியின் மற்றுமொரு
அற்புதமான படம். நெருப்புக் கோழிப் பண்ணையில்
வேலை பார்க்கும் ஒரு கிராமத்து மனிதன் நகரத்திற்கு
வந்த பின் எவ்விதம் மாறுகிறான் என்பதைச் சொல்லும்
படம். கிட்டதட்ட இவரின் எல்லாப் படத்திலும்
குழந்தைகள் பிரதான பாத்திரம் வகிக்கிறார்கள்.
நான் ரசித்த இரண்டு விஷயங்கள்.
தந்தை வேலை முடிந்து வந்ததும் ஓடிச் சென்று
குழந்தைகள் எனக்கு என்ன வாங்கி வந்தீர்கள்
என்று ஆவலாய்க் கேட்கும் இடம்.
வாகனங்கள் விரையும் சாலையில் குழந்தைகள்
பூங்கொத்து விற்கும் இடம்.
மற்றும் பல விஷயங்கள் இந்தியச் சூழலைப்
பிரதிபலிக்கின்றன.
இவரின் " children of Heaven " திரையில்
ஒளிரும் ஒரு சொர்க்கம்.

செவ்வாய், 30 நவம்பர், 2010

புரிகிறதா ?



ஸ்பெக்ட்ரம்
காமன்வெல்த் போட்டி
ஆதர்ஷ் வீட்டு வசதி
.
.
.
.
இன்ன பிற.
நமக்குப் பழகி விட்டது.
ஜப்பானின் நீதித்துறை அமைச்சர்
மினோருயனாகிடா தற்போது
தனது பதவியை ராஜினாமா
செய்துள்ளார்.
“நீதித் துறை அமச்சரின் வேலை
ரொம்ப ஈஸி”
என அவர் சொன்னதுதான் காரணம்.
பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில்
பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஜப்பானின் அசுர வளர்ச்சிக்கான
காரணம் புரிகிறதா தோழர்களே?

வெள்ளி, 26 நவம்பர், 2010

செவிக்குணவு



பீகாரில்
காங்கிரஸ்
காலி.
எடியூரப்பா
ஆட்டம்.
ரோசைய்யா
வீட்டுக்கு.
ராசாவுக்குப்
பின்னாடி
ராணியா?
உணவு
இடைவேளையில்
மென்று
கொண்டிருக்கிறார்கள்
தேசத்தின்
ஆரோக்கியத்தை.

புதன், 24 நவம்பர், 2010

மரணத்திற்கு முன்பான

விதிகளுக்கு
உட்பட்டு
வாழ்வதெனும்
விதியைக்
கடைபிடித்தால்
சில
விதிவிலக்குகள்
சாத்தியம்.
பழகிய பாதையில்
நடந்தால்
சேருமிடம்
உத்திரவாதம்.
பழையன
பழகினால்
காயங்கள்
தவிர்க்கலாம்.
மரணத்திற்கு
முன்பான
நொடியில்
சுழித்து
மேலெழும்பும்
கேள்விக்கு
பதிலற்று
மரித்துப்
போகலாம்.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

அறிக்கை


அருத்தி ராயின் அறிக்கை :
நான் இதை காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரிலிருந்து எழுதுகிறேன். காஷ்மீரைப் பற்றி அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்களில் நான் பேசியவற்றுக்காக நான் கைதுசெய்யப்படலாம் என இன்றைய செய்தித் தாள்கள் கூறுகின்றன. இங்கிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். பல்வேறு அரசியல் நோக்கர்களும் பல ஆண்டுகளாகச் சொல்லியும் எழுதியும் வருவதைத்தான் கூறினேன். நான் பேசியவற்றின் எழுத்து வடிவத்தைப் படிப்பவர்கள் அவை அடிப்படையில் நீதிக்கான அழைப்புகள் என்பதை உணர்வார்கள். உலகிலேயே மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; தங்களது தாய்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துயரத்தோடு காஷ்மீருக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் ; தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் குப்பைகளுக்குக் கீழே மறைந்துகிடக்கும் புதைகுழிகளைப் பார்த்தேனே காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் ராணுவ வீரர்கள், அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; இந்த ஆக்கிரமிப்புக்கான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கும் , இப்போது போலீஸ் ராச்சியமாக மாறிவிட்ட நாட்டில் பயங்கரங்களுக்கிடையே வாழப் பழகிக்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றுதான் நான் பேசினேன்.
நேற்று தெற்கு காஷ்மீரில் இருக்கும் ஆப்பிள் நகரமான ஷோபியானுக்கு நான் போயிருந்தேன். அங்குதான் ஆசியா , நிலோஃபர் என்ற இரண்டு இளம்பெண்களின் சடலங்கள் அவர்களின் வீடுகளுக்கு அருகில் ஒரு ஓடையில் கண்டெடுக்கப்பட்டன . குரூரமாக அவர்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டில் நாற்பத்தேழு நாட்கள் அந்த நகரம் மூடப்பட்டுக் கிடந்தது. அவர்களைக் கொன்றவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. நிலோஃபரின் கணவரும் ஆசியாவின் சகோதரருமான ஷகீலை நான் சந்தித்தேன்.இந்தியாவிடமிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துபோன, சுதந்திரம் ஒன்றுதான் ஒரே நம்பிக்கை என்று கருதுகிற மக்கள் துக்கத்தோடும் கோபத்தோடும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிச் சூழ்ந்திருந்தார்கள். கல்வீசியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டு கண்களுக்கிடையே தோட்டாவால் துளைக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்தேன். என்னோடு பயணம் செய்த இளைஞர் ஒருவர் அனந்த்நாக் மாவட்டத்தில் இருக்கும் தனது நண்பர்களான ‘ டீன் ஏஜ்’ இளைஞர்கள் மூன்றுபேரை எப்படி விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள் கல் வீசியதற்காக அவர்களது விரல் நகங்கள் எப்படி பிடுங்கப்பட்டன என்பதை விவரித்தார்.
‘ வெறுப்பைக் கக்கும் பேச்சை நான் பேசியதாக நாளேடுகளில் சிலர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இந்தியா சிதைவதை நான் விருபுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதற்கு மாறாக எனது பேச்சு அன்பிலிருந்தும் பெருமிதத்திலிருந்தும் வருகிறது. நாங்கள் எல்லோரும் இந்தியர்கள்தான் என அவர்களைப் பலவந்தப்படுத்திச் சொல்லவைக்கவேண்டும் என்பதற்காக அவர்களது விரல் நகங்களைப் பிடுங்கவேண்டாம்; கற்பழிக்கவேண்டாம் , படுகொலை செய்யவேண்டாம் என்ற உணர்விலிருந்து வருகிறது. நீதி விளங்கும் ஒரு சமூகத்தில் வாழவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து வருகிறது. தமது எண்ணங்களைப் பேசுகிற காரணத்தால் எழுத்தாளர்களை மௌனிகளாக்கி வைக்க இந்த தேசம் விரும்புகிறது என்பது பரிதாபகரமானது. நீதி கோருபவர்களை சிறையில் அடைக்க இந்த நாடு முயற்சிக்கிறது, ஆனால் மதவெறிக் கொலைகாரர்கள் ; இனப்படுகொலைகளைச் செய்தவர்கள் ; கொள்ளைக்காரர்கள்; கற்பழிப்பவர்கள் , ஊழல் செய்பவர்கள், ஏழைகளிலும் ஏழையான மக்களைச் சுரண்டுபவர்கள் போன்றவர்களெல்லாம் இங்கே சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அக்டோபர் 26, 2010 அருந்ததி ராய்

பி.கு: இது நிறப்பிரிகை ரவிக்குமார் அவர்களால்
மொழிபெயர்க்கப் பட்ட அறிக்கை.

புதன், 27 அக்டோபர், 2010

துளிகள்



எந்திரன் பார்த்தாச்சு..ஷ்.. அப்பாடா... என் பையன்
பார்க்கிற வீடியோ கேம்ஸ் எவ்வளவோ தேவலை.
ஒரே ஆறுதல் இடைவேளை வரை புன்னகைக்க
வைக்கிற சுஜாதாவின் வசனம்.




ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியர்களை உதைக்கிறார்கள்.
இந்திய மண்ணில் ஆஸ்திரேலியர்களை உதைத்திருக்கிறோம்.



தேனீக்களை வளர்க்கும் பெட்டியில் வெல்லப் பாகுடன்
தேனீக்கள் இறந்து போகாமல் இருக்க நான்கு வகை
ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகளை கலக்கிறார்கள். இந்த
மருந்து கலக்கப் பட்ட வெல்லப் பாகினை தான்
தேனாக நாம் பருகிக் கொண்டிருக்கிறோம். மருத்துவம்
சொல்கிறது அதிக ஆன்ட்டி பயாட்டிக் உடலுக்கு விஷம்.
இனிக்கும் விஷம்.



மணிப்பூரைச் சேர்ந்த ஷர்மிளா என்ற மனித உரிமையாளர்
பத்து வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அரசு கட்டாயப் படுத்தி நாசி வழி திரவ உணவு கொடுத்து
வருகிறது. ஷர்மிளாவின் உடல் நலிந்து கொண்டே
இருக்கிறது. ஆயுதப் படைக்கு இருக்கின்ற சிறப்பு
உரிமைகளை தடை செய்யச் சொல்லி போராடிக்
கொண்டிருக்கிறார்.சிறப்பு உரிமை என்பது எந்த நேரத்திலும்
ஆண்களை சித்திரவதை செய்து கொல்லவும், பெண்களை
வன்புணர்ந்து கொல்லவும் உபயோகிக்கப் படுவது. இதே
காரணத்திற்காக முன்பு பெண்கள் நிர்வாண போராட்டம்
நடத்தியது ஞாபகத்திலிருக்கக்கூடும்.



லியூசியாபோவுக்கு இந்த வருட அமைதிக்கான
நோபல் விருது . சீன அரசு இவருக்கு
பதினோரு வருட சிறை தண்டனை விதித்துள்ளது.
காரணம் இவர் ஒரு மனித உரிமைப் போராளி.
தியான்மென் சதுக்கத்தில் நடைபெற்ற மனித
படுகொலையை எதிர்த்து எழுத ஆரம்பித்தவர்.
இவர் உரிமைச் சாசனம் ஒன்றை தயாரித்து
வெளியிட்டுள்ளார். இந்த உரிமைச் சாசனம் 08
என்பது 350 மேற்பட்ட சீன அறிஞர்களால் முதலில்
கையெழுதிடப்பட்ட உரிமைப் பிரகடனச் சாசனம்
ஆகும். இது சீனாவில் சர்வதிகாரம் முடிக்கப்பட்டு,
மக்களாட்சி வர வேண்டும் என்றும், மனித
உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகிறது
மிகச் சரியாக பதினோரு வருடங்களுக்கு முன்
ஆங் ஸாங் சூ கி என்ற பர்மிய அரசியல் போராளிக்கு
நோபல் அமைதி பரிசு கிடைத்தது. இவரும் இன்னமும்
சிறையில் தானிருக்கிறார். இந்த நேரத்தில்
காந்திக்கு நோபல் மறுக்கப் பட்டது குறித்து
நோபல் கமிட்டி சொல்லி வரும் சால்ஜாப்புகள்
ஞாபகத்திற்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.

திங்கள், 4 அக்டோபர், 2010

துளிகள்

அயோத்தி வழக்கு பற்றிய லக்னோ உயர் நீதிமன்ற தீர்ப்பு
குறித்து ஊடகங்களும், இந்து அமைப்புகளும் தங்கள்
திருப்தியினை பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து ரொமிலா தாப்பர் ஒரு விமர்சனம்
வைத்துள்ளார்.
இது ஒரு அரசியல் தீர்ப்பு.
பல ஆண்டுகளுக்கு முன்னால் அரசே எடுத்திருக்கக்
கூடிய ஒரு முடிவை இது பிரதிபலிக்கிறது.
இந்தத் தீர்ப்பு மத அடையாளங்களை உள்ளடக்கிய
தற்கால அரசியலின் சிக்கலையும்பிரதிபலிக்கிறது.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட
ஒரு மசூதி ஒரு கும்பலினால் திட்டமிடு இடித்து
நொறுக்கப் பட்டது. ஒரு அரசியல் தலைமையினால்
இது ஊக்குவிக்கப் பட்டது. திட்டமிட்டு செய்யப்பட்ட
இந்த அழிவுச் செயலைக் குறித்து நீதிமன்றம்
எதுவும் கூறவில்லை. ஊகித்துக் கருதப்படும்
கோவில் தகர்க்கப் பட்டது கண்டனம் செய்யப்
பட்டுள்ளது.
ரொமிலா தாப்பர் பழங்கால இந்தியா பற்றிய
ஒரு புகழ் பெற்ற வரலாற்றாசிரியர்.

**********************************************

எந்திரன் குறித்த விமர்சனத்தை விட எந்திரனின்
அரசியல் படு சுவாரஸ்யம்.
எங்கள் ஊரில் ஒரு தியேட்டர் நீங்கலாக மற்ற
அனைத்து தியேட்டர்களிலும் எந்திரன் ரிலீஸ்.
ஒரு டிக்கெட் ரூ.300.
இதுதான் முதலாளித்துவ பொதுவுடமை
சித்தாந்தமோ?

*********************************************

ரஜினி வீட்டு விசேஷத்தில் பாடிய அருணாசாய்ராம்
ரஜினியின் பாராட்டுக் கேட்டு பரவசமானார் என
பத்திரிக்கையில் ஒரு செய்தி வந்துள்ளது.
அருணாவின் ’என்ன கவி பாடினாலும்’
’மாடு மேய்க்கும் கண்ணே’ இன்ன பிறவற்றிலும்
மோகித்துக் கிடக்கும் எனக்கு இந்த செய்தி
ஆச்சர்யத்தை கொடுக்கிறது.
மேதைகளும் மனிதர்கள் தான்.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

Form-16


அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆத்மாக்கள்
அனைவரும் அறிந்த விஷயம் இந்த Form-16.
ஒவ்வொரு வருஷமும் மார்ச் முடிந்ததும்
அலுவலகத்தில் ஒரு அய்யா கை எழுத்து
போட்டு இதை கொடுப்பார். அதில் அந்த
வருடம் முழுதும் நாம் பெற்ற சம்பளம்
பிடித்த வருமான வரி போன்ற விபரமும்
இருக்கும். இதைக் கொண்டு போய்
வருமான வரி அலுவலகத்தில் தாக்கல்
செய்ய வேண்டும். அதற்கு ஏகப்பட்ட
கெடுபிடி. வருமான வரி அலுவலகத்தில்
பிச்சைகாரனை பார்ப்பது போல் பார்ப்பார்கள்.
ரிட்டர்ன் ஃபைல் பண்னலைன்னா அபராதம்.
மிரட்டல் பத்திரிக்கைகளில் விளம்பரம்.
நிற்க.
அக்டோபர் ஒண்ணாம் தேதி எந்திரன் ரிலீஸ்.
படத்தயாரிப்புக்கான செலவுகளை கோடியில்
எழுதுகிறார்கள் எல்லா பத்திரிக்கைகளிலும்.

பி.கு : எந்திரன் இசை வெளியீட்டு விழா.
வெளியீட்டு விழாவை தயாரித்த விழா.
டிரய்லர் வெளியீட்டு விழா.
டிக்கட் முன்பதிவு.
ஜாக்கிரதை.
அடுத்த வாரம் எந்திரனில் இடைவேளை
விட்டாச்சு விழா.

திங்கள், 20 செப்டம்பர், 2010

Udaan


ஹிந்தி திரைப்படம்.
சப்-டைட்டில் தயவில் பார்த்த படம்.
மிக அற்புதம் என்று சொன்னால் மிகையாகாது.
ரோஹன்.
ஹாஸ்டல் சுவரைத் தாண்டிக் குதித்து சினிமா
பார்க்கச் செல்கிறான் நண்பர்களுடன். அங்கே வார்டன்
அவர்களைப் பார்த்து விட பள்ளியிலிருந்து
விரட்டப் படுகிறான்.
எட்டு வருடங்கள் ஹாஸ்டலில் தன்னை வந்து
பார்க்காத தந்தையிடம் வந்து சேர்கிறான்.
அர்ஜுன் இன்னொரு பெண் மூலமாக அவன்
தந்தைக்குப் பிறந்த சிறுவன். இருவரும்
தாயை இழந்தவர்கள்.
ரோஹனுக்கு எழுத்தாளனாக வேண்டும் என்பது
கனவு. கவிதைகள் எழுதுகிறான்.
அவன் அப்பா சொல்கிறார். எழுத்தாளனாக
விட மாட்டேன். பட்டினி கிடந்து சாகப் போகிறாய்.
அவன் அப்பா சர்வாதிகாரி. அவரை பையன்கள்
சார் என்றுதான் அழைக்க வேண்டும்.
ரோஹனை பொறியியல் படிக்க வைக்கிறார்.
மீதப்பட்ட நேரத்தில் தன் ஃபேக்டரியில் வேலை
பார்க்க வைக்கிறார்.
சிறுவன் அர்ஜுனை தந்தை பெல்ட்டால்
அடிக்கிறார்.
தந்தை மூன்றாவது பெண்ணை திருமணம்
செய்ய ரோஹன் அர்ஜுனை அழைத்துக் கொண்டு
கவிதைகளுடன் மும்பை செல்கிறான்.
ஜனரஞ்சக பத்திரிக்கையில் வரும்
தொடர் போன்ற சாயலில் கதை இருந்தாலும்
சிறுவர்கள் நடிப்பில் பின்னுகிறார்கள்.
உதிரிப்பூக்களை கொஞ்சம் ஞாபகப் படுத்துகிறார்கள்.
அமித் திரிவேதி இசையில் சில உச்சங்களைத்
தொடுகிறார்.
படத்தில் அனுராக் காஷ்யப்பின் பங்கும் உள்ளது.
இவர் பிளாக் ஃபிரைடே,தேவ் டி போன்ற மிகச்
சிறந்த படங்களை இயக்கியவர்.
இப்படம் 2010 கேன்ஸ் திரைப்பட விழாவில்
பங்கு பெற்றது.
விக்ரமாதித்யா இயக்கியுள்ளார்.

பி.கு : இப்படத்தை தயவு செய்து தமிழ் படத்துடன்
ஒப்பிட்டுப் பார்த்து ஆதங்கப் பட வேண்டாம்.
காலமெல்லாம் ஆதங்கப் பட்டுக் கொண்டேயிருக்க
வேண்டும்.

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

பதிவரசியல் : ஒரு ஆணாக அவமானப்படுகிறேன்

மேலே உள்ள தலைப்பில் ஆ.மாதவராஜ் சார் தன்
பிளாக்கில் எழுதியுள்ளார். படிக்கும் போதே மனசுக்கு
கஷ்டமாக இருக்கிறது. பெண்கள் பொது தளத்தில்
எழுத வரும்போது ஆணகள் எப்படி
எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதற்கு மற்றொரு
உதாரணம். முந்தைய உதாரணம் மறைவதற்குள்
அடுத்தது. விதி விலக்குகளை விலக்கி விட்டு
பேசுவோம்.நவீனமயம் என்பது நம் சிந்தனையில்
வரவேண்டும். அது நாம் உபயோகிக்கும்
பொருட்களில் மட்டுமே இருக்கிறது. வினவு தளத்தில்
அந்த சகோதரி இரு ஆண் பதிவர்களால் தனக்கு
ஏற்பட்ட மன நெருக்கடிகளைப் பற்றி எழுதியுள்ளார்.
ஆண்களின் பிரச்சினைதான் என்ன?
ஒரு கால் இருபத்தோறாம் நூற்றாண்டிலும்,
மறு கால் பத்தொன்பதாம்
நூற்றாண்டிலும் ஊன்றி நிற்கிறார்கள்.
பெண்கள் நினத்தால் ஆண்களை விட
நிறைய விஷயங்களை எழுத முடியும்.
எழுத மறுக்கிறார்கள் என்பதற்கான
காரணம் இப்போது புரிகிறது. ஆணாதிக்க
முட்பாதையைக் கடக்க வேண்டிய சூழல் இங்கு
நிலவுகிறது. எல்லா ஆண்களும் தங்களின்
சிந்தனை செல்லும் தடத்தை மாற்றிக் கொண்டால்
பெண்களின் பங்களிப்பு நமக்கு நிறைய கிடைக்கும்.

செய்வோமா?

நானும் மாதவராஜ் சாரை வழிமொழிகிறேன்.

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

இன்றைய ....

தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்த்து
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தொடர்ந்திருந்த வழக்கை
உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது ஒரு
பாரட்டப்பட வேண்டிய தீர்ப்பு. இன்றைய நடுத்தர
வர்க்கம் மேட்டுக்குடி சிந்தனையைத் தத்து எடுத்துக்
கொண்டதாலேயே தன்னை மேட்டுக்குடியாக
நினைத்துக் கொண்டு தன்னளவில் ஒரு தத்துவத்தை
உருவாக்கிக் கொண்டுள்ளது. ஏற்றத்தாழ்வில்லாமல்
எல்லாக் குழந்தைகளும் ஒரே கல்வியைக் கற்பதா?
இந்த தத்துவத்தை கையிலெடுத்துக் கொண்ட
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நீதிமன்றம் சென்றிருக்கின்றன.
இத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதை வைத்துதான்
இதனை விமர்சிக்க முடியும். பொறுத்திருப்போம்.

***************************************************

இன்று காலையில் பின்பக்கம் அந்தச் சிறுவர்களைப்
பார்த்தேன். மூன்று சிறுவர்கள். அனைவரும் பத்து
வயதுக்குட்பட்டோர். ஏழ்மை உடையிலும், உருவத்திலும்.
குப்பை பொறுக்கிக் கொண்டிருந்தனர். படிக்க வேண்டிய
குழந்தைகள். மனசில் குற்ற உணர்ச்சியும், கோபமும்
நிரம்பி வழிந்தது. மீரா நாயரின் “ சலாம் பாம்பே “
ஞாபகம் வந்தது. எல்லாவற்றையும் சினிமாவுடன்
ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வது சரிதானா?

***************************************************

9/11 என்றால் 2001 ல் அமெரிக்காவில் நடந்த இரட்டைக்
கோபுர தாக்குதல் என்றாகிவிட்டது. அன்றிலிருந்து மிகச்
சரியாக 28 வருடங்களுக்கு முன்பு சிலியில் ஒரு
தாக்குதல் நடந்தது. அதன் விபரம் மிகச் சுருக்கமாக :

1971 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வென்று சால்வடார்
அலண்டே சிலியில் சோசலிச அரசை நிறுவினார். இரண்டே
ஆண்டுகளில் அவர் அமல்படுத்திய சோசலிச சீர்திருத்தங்களால்
நாடு வேகமாய் முன்னேறியது. ஆனால் அமெரிக்க உதவியுடன்
எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட போக்குவரத்துப் பணியாளர்
வேலை நிறுத்தம் நாட்டை ஸ்தம்பிக்க வைத்தது. சிலியின்
ஜனாதிபதி மாளிகை சி.ஐ.ஏ.வினால் குண்டுவீசி
தகர்க்கப் பட்டது, அதிபர் சால்வடார் அலேண்டெ படுகொலை
செய்ய பட்டதும் 1973 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம்
தேதியில்தான். அமரந்தாவின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த
” பனியும் நெருப்பும் “ என்ற லத்தீன் அமெரிக்க சிறுகதை
தொகுதியில் இந்தச் செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது.

வரலாற்றில் இரண்டு நிகழ்வுகள். முன்னது மறக்கடிக்கப்
பட்டது. பின்னது நினைக்கப் படுகிறது.
அண்ணன் அமெரிக்காவின் கைங்கர்யம்.

புதன், 8 செப்டம்பர், 2010

மிஷ்கின் எனும் படிப்பாளி



மீண்டும் ஒரு முறை “அஞ்சாதே” படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
முதல் முறை பார்த்த போது ஏற்பட்ட உணர்வு நீர்த்துப் போகவில்லை.
படத்தைப் பற்றி சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும்
இயக்குனர் மிஷ்கினைப் பற்றிச் சொல்ல்வே விருப்பம். முதல் படம்
சித்திரம் பேசுதடியில் நிறைய ஒளிக்கீற்றுகள் தென்பட்டன.
இரண்டாவது படம் அதை ஆமோதித்தது.
ருஷ்ய நாவலின் கதாபாத்திரத்தின் பெயரை புனைந்து கொண்டதில்
இருந்தே இவருக்கு இலக்கியத்தின் மீதுள்ள காதல் புரிகிறது.
திரைத் துறைக்கு வருவதற்கு முன் இவர் லேண்ட்மார்க் புத்தக
விறபனை நிலையத்தில் வேலை பார்த்துள்ளார். புத்தகம் படிக்கும்
ஆர்வத்திற்காக மட்டுமே.
இலக்கிய பின் புலம் உள்ளவர்கள் திரைத்துறையில் நிறைய
மாற்றங்கள் செய்யலாமென்பதற்கு இவர் ஓர் அடையாளம்.
இந்த இடத்தில் ஒரு வருத்தத்துக்குரிய செய்தியையும் சொல்ல
வேண்டியுள்ளது.
இவரது மூன்றாம் படமான “நந்தலாலா” இன்னும் திரையிடப்பட
முடியவில்லை. காரணம் நாம் அனைவரும் அறிந்ததே.
நம் சூப்பர் ஸ்டார்கள் எவரும் படத்தில் இல்லை.
பஞ்ச் வசனங்கள் இல்லை. ஏகப்பட்ட இல்லைகள்.

இதே மாதிரி பார்க்க முடியாமல் போன படங்கள்:

மகேந்திரனின் ”சாசனம்”.

பிரியதர்ஷனின் ”காஞ்சிவரம்”

மகனின் கடிதத்திற்காய் காத்திருக்கும் ஒரு கிரமத்துத் தாயைப் போல்
காத்திருக்கிறேன்.

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

1 சந்தோஷமும் 3 எரிச்சல்களும்

வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகளுக்கு ஏதேனும் விபத்து நேரிட்டால்
அவர்கள் வருமானம் ஈட்டாதப் பிரிவைச் சார்ந்தவர் என்ற வகையில் சொற்பத்
தொகையே இழப்பீடாக வழங்கப் படும். இதில் மிகவும் வேதனைக்குரிய விஷயம்
வருமனம் ஈட்டாதவர்கள் பிரிவில் வேலைக்குப் போகாத குடும்பத் தலைவிகள்
அதன் பின் வருபவர்கள் பிச்சைக்காரர்கள் மற்றும் விபச்சாரம் செய்பவர்கள்.
ஆனால் சமீபத்திய தீர்ப்பு ஒன்றில் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து குடும்பத்
தலைவிகளின் பங்கு குறித்து சிலாகித்துப் பேசி பெரும் தொகையை இழப்பீடாக
தரச் சொல்லியிருக்கிறார்கள். இது மிகவும் பாரட்டப்பட வேண்டிய விஷயம்
மட்டுமல்ல. இனி வரும் தீர்ப்புகளுக்கு இது மிகவும் உதவிகரமாயிருக்கும்.

*******************************************

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பொறுப்பாளருக்கு அரசின் வழிகாட்டலை மீறி
300 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதற்கான வழக்கில் அவருக்கு ஜாமீன்
தொகை ரூபாய் 200 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இடத்தில் நம்
நினைவுக்கு வருவது போபால் பேரழிவிறகு காரணமானவர்களுக்கு
நிர்ணயிக்கப்பட்ட ஜாமீன் தொகை...
சில ஆயிரங்கள் மட்டுமே....!

*******************************************

மற்றொரு வழக்கில் வரதட்சணை கேட்பது சட்டப்படிக் குற்றமில்லை.
வரதட்சணைக் கேட்டு பெண்ணை உடல்ரீதியாகத் துன்புறுத்தினால்தான்
குற்றமென தீர்ப்பு வந்துள்ளது. அனைத்து மகளிர் இயக்கங்களும் இதனை
எதிர்த்துள்ளன.

*******************************************

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு ரூபாய் பதினாறாயிரத்திலிருந்து
எண்பதாயிரம்.
இந்தியாவில் உள்ள மிகப் பிரபலமான காகித தயாரிப்புக் கம்பெனி
இருபது மூங்கில் கழிகள் கொண்ட ஒரு கட்டுக்கு நிர்ணயித்துள்ள விலை
ரூபாய் ஒன்று. மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகே இருபது பைசாவிலிருந்து
ஒரு ரூபாயாக ஏறியிருக்கிறது. இந்த மூங்கில் கழிகளை, வன அதிகாரிகளிடமிருந்து
மீண்டு குறந்த பட்சம் பத்து கிலோ மீட்டர் தலையில் சுமந்து, மலைப்பாதையில் இறங்கி வந்து இந்த ரூபாயைப் பெறுகிறார்கள் மலைவாழ் மக்கள்.

**************************************************

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

கொஞ்சம் இளைப்பாறிக் கொள்ள

விளையாட்டுக்களால்
கரை புரண்டு
ஓட வேண்டிய
குழந்தைகளின்
மாலைப் பொழுதுகள்
வீட்டுப் பாடங்களால்
தேங்கி நாறுகின்றன.

******************

எல்லாருக்கும்
பிடித்தவனாய்
இருக்கும்
முயற்சியில்
என்னையே
பிடிக்காமல்
போனது.

*****************

அவிழ்த்து
வைத்த
ஊஞ்சல்
ஆடிக்
கொண்டிருக்கிறது
மனசுக்குள்.

*****************

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

சில கேள்விகளும் சில புரிதல்களும்

தோழியர் கயல் தொடர்பதிவிற்கு அழைத்துள்ளார்கள்.
மிக்க நன்றி.
பதிவுலகை பொறுத்த வரை நான் ஒரு தவழும்
குழந்தை. எனினும் .....

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

மதுமிதா.
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை. நான் சந்தானகிருஷ்ணன். பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்த போது அந்தப் பெயரில் இருந்த வசீகரத்திற்காக அதை புனைந்து கொண்டேன்.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....

அது ஒரு சாதாரண விஷயம்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எழுதுபவது மட்டும்தான் பிரதான செயல்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

நூறு சதவீதம் கற்பனை என்ற ஒன்று உண்டா?.பின்னூட்டங்கள்
தான் பின் விளைவுகள்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

எழுதுவதில் உள்ள சுவாரசியத்திற்காக மட்டுமே.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இரண்டு. இரண்டும் தமிழ்.
மற்றொன்று :
http;//thejushivan.blogspot.com

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம், பொறாமை என்பவையெல்லாம் கொஞ்சம் தீவிரமான உணர்ச்சிகள். நல்ல எழுத்தைப் படிக்கும் போது ஏற்படுவது சந்தோஷம் மட்டுமே.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

நண்பர் சுந்தர்ஜி. ஆத்மார்த்தமான எழுத்துக்குச் சொந்தக்காரர்.
சுந்தர்ஜி என்ற இதழை நடத்தி வருகிறார்.
அவர் அவசியம் படிக்கப் பட வேண்டியவர்.
அவரைப் படிக்க :
http://sundarjiprakash.blogspot.com

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னைப் பற்றி என் எழுத்துக்கள் சொல்லக் கூடும்.

இந்த பதிவைத் தொடர இவர்களை அழைக்கிறேன்

ரிஷபன்
ஹரணி
பாலா
பத்மா

பிரிய ரெஜி டீச்சர்

ஞாபகமிருக்கிறதா டீச்சர்.
நான் வனப்பேச்சி.
நீலிமலை வனப்பேச்சி.
காட்டில் பெய்யும் மழை போல உங்கள் நினைவுகள்
மிக அடர்த்தியாய் இன்னமும் இருக்கிறது.
நன்றாக ஞாபமிருக்கிறது டீச்சர்.
மிஷனரிகள் கூட கண்டுகொள்ளாத காடு எங்களது.
தினமும் பத்து கிலோமீட்டர் தூரம் ஏறி வருவீர்கள்.
எங்களுக்கும் எல்லாம் கற்றுக் கொடுத்தது நீங்கள் தான்.
முதல் குருதி குறித்து கூட.
அப்போது நீங்கள் எங்களின் தேவதை.
காக்கி பேண்ட்டும்,ஒட்ட வெட்டிய தலை மயிரும்
செல்வதற்கு ஒரு சைக்கிளுமாய் நீங்கள்
நீங்கள் நிரம்ப மாறுபட்டிருந்தீர்கள்.
உங்கள் சிந்தனைகளும் தான்.
கல்வியின் முக்கியத்துவம் உங்களால்தானே
அறிந்தோம். அந்த உந்துதலில்தான்
பொறியியல் படித்தேன்.
கட்டாயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
வனத்தையும்,மலைகளையும்
தெய்வங்களாய் வணங்கும் நாங்கள்
இந்த அரசாங்கத்தால் எவ்வளவு
இழிநிலைக்குத் தள்ளப் பட்டிருக்கோமேன.
பெரு முதலாளிகள் வனங்களையும்
மலைகளையும் கொன்று குவித்துக்
கொண்டிருக்கிறர்கள். அவர்கள் அருகே
அரசு மர்மப் புன்னகையுடன் கைகட்டி
ஏவல் செய்கிறது.
எங்களை நாகரீகப் படுத்துதல் என்கிற
பெயரில் காடுகளிருந்து நகரத்துக்கு
அப்புறப் படுத்த முயற்சிக்கிறார்கள்.
அதைத்தான் நாங்கள் எதிர்க்க
ஆரம்பித்திருக்கிறோம்.
அதனாலேயே எங்களுக்கு
தீவிரவாதிகளென பெயர்சூட்டி
அரசாங்கம் ஊடகங்களின் துணையுடன்
பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது.
இதற்கு நம் அறிவுஜீவிகளின் ஆதரவு வேறு.
டீச்சர்...
எந்த நேரமும் நாங்கள் படுகொலை
செய்யப்படலாம். எங்கள் பெண்கள்
வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப் படலாம்.
எத்தகைய யுத்தத்திலும்
முதல் பாதிப்பு பெண்களுக்கும்,
குழந்தைகளுக்கும் தானே.
அதுதான் இங்கே நடந்து
கொண்டிருக்கிறது.
டீச்சர்...
ரெண்டு,மூன்று நாட்களகவே
உங்கள் ஞாபகம் வந்து கொண்டே
இருக்கிறது. அதனாலே இக் கடிதம்.
இது உங்கள் கையில் கிடைக்கலாம்.
கிடைக்காமல் போகலாம்.
எனினும் நம்பிக்கையுடன்
முடிக்கிறேன்.
தாங்கள் நலமா என்று விசாரிக்க
கூட முடியாத நெருக்கடியில் நிற்கிறேன்.

உங்கள்

வனப்பேச்சி.

கடிதத்தை மடிக்கையில் பின் பக்கம்
மெலிதான சப்தம் கேட்டது.
திரும்புவதற்குள்
வனப்பேச்சியின் பின் மண்டையில்
பேரரவத்துடன் ஒரு துப்பாக்கி வெடித்தது

செவ்வாய், 27 ஜூலை, 2010

அலுவலகத்தில் அம்மா



ஒவ்வொரு
தொலைபேசி
அழைப்பிற்கும்
சுரக்கின்றன
மார்புகள்.

*******************

பள்ளிக்கு
அனுப்பிய
குழந்தையின்
ஞாபகத்தில்
சோறிடுகிறாள்
அலுவலக
ஜன்னலில்
துள்ளி
விளையாடும்
அணிலுக்கு.

******************

ஞாயிறு
வரை
பொறுத்திரு
கண்ணே.
முத்த மழை
பொழிந்து
கொள்ளலாம்.

வெள்ளி, 23 ஜூலை, 2010

ஒரு திரைக்கதையாசிரியனைக் குறித்து



லோகி (நினைவுகள்- மதிப்பீடுகள்)

மலையாளத் திரையுலகத்தின் மிக வசீகரமான திரைக்கதையாசிரியர்களில் ஒருவரான
லோகி என்கிற ஏ.கே.லோகிததாஸ் குறித்து ஜெயமோகன் எழுதியுள்ளார்.
படிக்கும் போதெ மலயாளத் திரையுலகம் குறித்து பொறாமை எழுவதைத் தடுக்க
முடியவில்லை.கதை,திரைக்கதையாசிரியருக்கு இயக்குனருக்கு நிகரான அந்தஸ்து.
தனியாவர்த்தனம்,கிரீடம்,ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா,பரதம்,அமரம்,
தூவல் கொட்டரம் எனச் சொல்லிக் கொண்டெ போகலாம். அத்தனைக்கும் கதை,
திரைக் கதை லோகியே. கிட்டதட்ட அறுபதுக்கு மேற்பட்ட பிரபலமான படங்களுக்கு
கதையால் உயிர் கொடுத்தவர். மிகச் சிறந்த படங்களையும் இயக்கியுள்ளார்.
இந்த நேரத்தில் நம் தமிழ் படங்கள் ஞாபகத்திற்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.
இலக்கியவாதிகளை அங்கீகரிக்காத உலகம் அது. மிகச் சொற்பமான படங்களே
நாவல்களைத் தழுவி வந்துள்ளது. ஜெயகாந்தன்,மகேந்திரன் முக்கியமானவர்கள்.
மற்றபடி இங்கே கதை என்பது ஒரு கும்பலால் உருவாக்கப் படுகிறது இயக்குனருக்காக.
மலிவான விலையில் கிடைக்கும் டிவிடிக்கள் புண்ணியத்திலும் கதைகள்
உருவாக்கப் படுகின்றன. எஸ்.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் கொஞ்சம்
முயற்சிக்கிறார்கள். நம்மிடம் மிகச் சிறந்த கதைகளும்,கதையாசிரியர்களுமுண்டு.
அவர்களைப் பயன் படுத்திக் கொண்டால் நடிகர்கள் பின்னால் போய் தலையில்
துண்டு போட்டுக் கொள்ள அவசியம் ஏற்படாது. ஒளிப்பதிவாளர்கள்,இசையமைப்பாளர்கள்,
பாடலாசிரியர்கள் இவர்களை விட கதையாசிரியர்கள் சிறந்த படத்துக்கான ஆணிவேராய்
இருக்கக் கூடியவர்கள். இலக்கியவாதிகளின்றி இனி திரைஉலகம் இல்லை
என்ற நிலை வரவேண்டும்.
வரும்.
காத்திருப்போம்.

ஞாயிறு, 18 ஜூலை, 2010

ஒன்று , இரண்டு , மூன்று


குல்மொஹர்
உதிர்க்கும்
தீத்துளிகளில்
குளிர்காய்ந்து
கொண்டிருக்கிறது
தகிக்கும்
என் காதல்.


வேட்டையாடிய
மிருகத்தின்
பக்கத்தில்
நின்று
புகைப்படம்
எடுத்துக்
கொள்பவனை
நினைவூட்டுகிறாய்
என்று
சொல்லிப் போனான்
வென்ற காதலை
மணமுடித்த
அன்று.



சுவரிலிட்ட
குழந்தையின்
கிறுக்கல்களில்
தேடினால்
கிடைக்கக் கூடும்
கடவுளின்
கையொப்பம்.

புதன், 14 ஜூலை, 2010

சோளகர் தொட்டி


மிகவும் தாமதமாகத்தான் ராவணன் பார்த்தேன்.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு கேனத்தனமானப் படம்.
புறங்கையால் தள்ள வேண்டிய படம்.
அவ்வளவே. இதுக்கா பதிவுலகில் இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள்.
ஒருவர் மணிரத்னம் அம்பானியின் அடிவருடி என்கிறார்.
மற்றொருவர் அரசாங்கத்தின் கைக்கூலி என்கிறார்.
பிறிதொருவரோ பார்ப்பன சதி என்கிறார்.
இந்தச் சமயத்தில் “ சோளகர் தொட்டி” ஐ நினைவு கூர்கிறேன்.
நீண்ட காலமாக மனித உரிமைச் செயல்பாடுகளில் தொடர்புடையவரான வழக்கறிஞர் ச.பாலமுருகன் எழுதியுள்ள நாவலே சோளகர் தொட்டி. இதனை நாவல் வடிவத்தில்
அமைந்த பழங்குடி மக்களின் வாழ்க்கை தொடர்பான ஒரு வரலாற்றுப் பதிவு என்றும் சொல்லலாம்.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படை வனதேவதையின் குழந்தைகளாகிய
மலைவாழ் மக்களிடம் நடத்திய கொடூரங்களைப் பற்றி சொல்கிறார்.

’’எங்கேடி உன் புருஷன்? '' என்றான் அதிகாரி.

''தெரியாதுங்க''

''இவளுக்கும் கரண்ட் கொடுங்க'' என்று உத்தரவிட்டான். அவள் அச்சத்தில் பின்னே நகரும்போது போலீஸ்காரன் மெக்கர்பெட்டியிலிருந்து மின் ஒயரை எடுத்து அவன் முன்னே வந்தான். பின்னே நகர்ந்தவள் சுவர் முட்டி நின்றாள். அவளது காதுகளில்இரண்டு கிளிப்புகளும் அவளின் மார்புக் காம்புகளில் இரண்டும், பிறப்பு உறுப்பில் ஒன்றும் மாட்டப்பட்டது. மாதி கையெடுத்துக்கும்பிட்டாள். பலனில்லை. போலீஸ்காரன் மெக்கர் பெட்டியின் கைப்பிடியை நான்கு சுற்று சுற்றினான். பின் அதன் கருப்பு நிறப்பொத்தானை அழுத்தினான்.

''அட சாமி'' என அவள் அறை முழுவதும் திக்கற்று ஓடினாள். மீண்டும் மெக்கர் பெட்டியின் சுழலும் கைப்பிடி சுற்றப்பட்டது.அவள் பள்ளத்தில் வீழ்வது போல் உணர்வு கொண்டாள். மீண்டும் சுற்றப்பட்டது. அவள் தன் உடலில் நரம்புகள் ஆங்காங்கேதலை முதல் பாதம் வரை வெடித்துச் சிதறச் செய்யுமளவு வலியையும் அதிர்வையும் அனுபவித்துத் தரையில் விழுந்தாள்.

கண்ணீர் சிந்தாமல் இதனைப் படிக்க முடியாது.
அனைவரும் படிக்க வேண்டிய நாவல் இது.

ஆசிரியர் - ச.பாலமுருகன், வனம் வெளியீடு, 17, பாவடித் தெரு, பவானி - 638301.

பின் குறிப்பு : வீரப்பனை அழித்தாகி விட்டது. விருதுகளும் பெற்றாகிவிட்டது.
இருவருக்குமிடையே பாதிக்கப் பட்ட மக்களுக்கு..?
கேள்விக் குறிகளுக்கு நம் தேசத்தில் பஞ்சமில்லை.

திங்கள், 12 ஜூலை, 2010

குழந்தைகள் வாழ்க



நண்பர் அஹமத் இர்ஷாத் என்னை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்திருந்தார்.
உபரியாய் ஒரு சுதந்திரமும் கொடுத்திருந்தார். எந்த தலைப்பில் வேண்டுமானாலும்
எழுதலாம். நன்றி இர்ஷாத்.
என்னை மிக மிக கவர்ந்த ஒரு புத்தகம்.
"குழந்தைகள் வாழ்க".
இது ஒரு மாஸ்கோ பதிப்பக நூல்.
ஷ.அமனஷ்வீலி எழுதியது.
அமனஷ்வீலி சோவியத் விஞ்ஞானி,மனோதத்துவ டாக்டர்,பேராசிரியர்.
முதன் முதலில் பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தரும்
முறைகளையும்,வழிகளையும் பற்றி இந்நூலில் எழுதியுள்ளார்.
இந்நூலில் வரும் முதல் வகுப்பு ஆசிரியர் தன் வகுப்பில் சேர வரும் குழந்தைகளுக்கு
பள்ளி திறக்கும் முன்பாகவே அவர்களை வரவேற்று ஒரு கடிதம் எழுதுகிறார் வாழ்த்து
அட்டையுடன்.
அவர்கள் வருவதற்கு முன்னதாகவே அக் குழந்தைகளின் பெயர்,அவ்ர்களின்
குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய தகவல், குழந்தைகளுக்குப் பிடித்த விளையாட்டு
இது மாதிரியான தகவல்கள் அனைத்தையும் சேகரித்து விடுகிறார்.
முதல் நாள் ஒவ்வொரு குழந்தையின் பெயர் சொல்லி அழைத்து
பரிசு பொருட்கள் வழங்குகிறார்.
அட்டைகள்,படங்கள்,சின்னச் சின்ன பொருட்கள் இவைகள் தான்
பாடத்தின் கரு.
குழந்தைகள் பாடுகின்றன.. ஆடுகின்றன.. விளையாடுகின்றன..
வாரம் ஒரு முறை ஒவ்வொரு குழந்தையின் வீட்டிலிருந்தும் ஒருவர்
விருந்தினராக அழைக்கப் படுகிறார். ஒரு விருந்தினர் கதை சொல்கிறார்.
மற்றவர் பாடிக்காண்பிக்கிறார்.இன்னொருவர் மேஜிக் செய்து காட்டுகிறார்.
குழந்தைகள் ஆளுக்கு ஒரு புத்ததகம் தயாரிக்கிறார்கள். அவரவர்க்குப்
பிடித்த படங்களை ஒட்டி. அந்தப் புத்தகங்களை வைத்து ஒரு சின்னஞ்சிறு
நூலகம். ஒருவர் மற்றவருக்கு உதவுவது முக்கியமான பாடம்.
இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.
ஆசிரியர் ஒரு பட்டியல் போடுகிறார்.

ஆசிரியரின் கட்டளைகள்,ஏவல்கள்களை உடனடியாக நிறைவேற்றுமாறு
குழந்தைகளைக் கட்டாயப்படுத்தலாமா? - கூடாது.
கட்டாய வீட்டுப் பாடங்களைத் தரலாமா? - கூடாது.
குழந்தைகளுக்கு மதிப்பெண்களைப் போடலாமா? - கூடாது.
வகுப்பில் யார் மற்றவரை விட நன்றாகப் படிக்கின்றனர் என்று
சொல்லலாமா? - கூடாது.
வகுப்பில் குழந்தைகள் கைகளைக் கட்டிக் கொண்டு உட்காரவேண்டும்
என்று சொல்லலாமா?- கூடாது.
குழந்தை வகுப்புக்குக் கொண்டு வந்த விளையாட்டு சாமானைப்
பிடுங்கலாமா? - கூடாது.
குழந்தையைப் பெயில் செய்யலாமா? - கூடாது.
சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டுமென குழந்தைகளிடம்
சொல்லலாமா? - கூடாது.
இந்தக் கூடாது வகையறாக்களைத் தான் நம் பள்ளிகள்
செய்து கொண்டிருக்கின்றன.
இதை நாமும் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம்.
கொஞ்சம் யோசிப்போம்.

வியாழன், 8 ஜூலை, 2010

இன்றைய கேள்விகள்

1. திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இலங்கைக்குச்
செல்லக் கூடாதென தடை விதித்தவர்கள் கிரிக்கெட்
விளையாடச் செல்பவர்களுக்கு என்ன அறிவுறுத்தப்
போகிறார்கள்?

2. திரைப்படத்தின் ஆணி வேர் கதை என்று படம்
பார்ப்பவர்களுக்கேத் தெரிந்திருக்கும் போது
டைரக்டர்கள் கதையை விடுத்து கதாநாயகர்கள்
பின் ஓடுவது ஏன்?

3. ஆண்டர்சனை தப்பிக்க விட்டவர்கள் அப்சலையும்
கஸாப்பையும் தண்டிக்கத் துடிக்கும் காரணம் என்ன
என்று அரசாங்கத்தைக் கேள்வி கேட்பவர்களின்
உள் நோக்கம் தான் என்ன?

4. ஒரு சித்தாந்தத்தை தழுவிக் கொண்ட அறிவுஜீவிகள்
தலைமை தவறு செய்தாலும் எதிர் கேள்வி
கேட்காதது ஏன்?

5. ஆர்.டி.ஓ மற்றும் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில்
உபரித் தொகை கொடுக்காமல் வேலை
நடக்குமா?

பி.கு : அரசாங்கத்தைக் குறித்து ஒரு கேள்வி கூட
இல்லையே என்று ஆதங்கம் வேண்டாம்.
எது மாறக் கூடும் என்ற நம்பிக்கை
உள்ளதோ அதை பற்றி மட்டும் தான் கேள்வி.
இது இருண்மை சிந்தனை என்று எதிர்வினை
வரினும் பதிலில் மாற்றமில்லை.

ஞாயிறு, 4 ஜூலை, 2010

தங்க மகன் விருது



" யாவரும் நலம்” சுசி அவர்கள் எனக்கு இந்த விருதைத் தந்துள்ளார்கள்.
அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விருதை நான் ரசித்த பதிவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த
சந்தோஷமடைகிறேன்.

சுந்தர்ஜிபிரகாஷ் - குற்றாலச் சாரலில் நனையும் அனுபவத்தைக் கொடுக்கும்
இவரது கவிதை மனசுக்காக.

ஹரணி - இலக்கியத்தில் மட்டுமல்ல அனைத்திலும் என் கூட வரும்
பிரிய சிநேகிதனுக்காக.

ரிஷபன் - கதை,கவிதை,கட்டுரை,இணையம் என அனைத்திலும்
ஜ்வலிப்பதற்காக.

கமலேஷ் - இவரது வசீகரமான கவிதைகளுக்காக.

பாலாவின் பக்கங்கள்- இவரது நுட்பமான விமர்சனப் பார்வைக்காக.

சனி, 3 ஜூலை, 2010

காத்திருப்பு



நிலவு
பின்தொடர்வதாய்ச்
சொல்லி
கைகளை
இறுகப் பற்றி
இழுத்துப் போகும்
என் மகளின்
முதல் கவிதைக்காய்
காத்திருக்கின்றன
நான்
எழுதிய கவிதைகள்
அனைத்தும்.

சனி, 26 ஜூன், 2010

அருந்ததிராயும், வாஸந்தியும்


உயிரோசையில் வாஸந்தி அவர்கள் “ அருந்ததிராய்
எழுதிய ஒரே புத்தகம் “ என்று தலைப்பிட்டு
அருந்ததியின் The God of small things பற்றி
எழுதியுள்ளார். தலைப்பிலேயே ஒரு எள்ளல்
தொனிக்கிறது. இந்த நாவல் அமெரிக்க நாவலான
TO KILL A MOCKINGBIRD ன் சாமர்த்தியமான
தழுவல் என்று ஒரு விமர்சகரிடமிருந்து
குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக எழுதியுள்ளார்.
அமெரிக்க நாவல்களை படிக்க விருப்பமில்லாத
அருந்த்ததி To kill a mockingbird ஐ மட்டும்
படித்திருப்பதாக ஒரு பேட்டியில் சொல்லியிருப்பதாக
விமர்சகர் குறிப்பிட்டிருப்பதாக ( எத்தனை ஆக )
வாஸந்தி சொல்கிறார். 1997 ல் வெளிவந்த
அருந்ததியின் நாவல் 1960 ல் வந்த அமெரிக்க
நாவலின் தழுவல் என்று ஒருவர் 2010 ல்
கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார். அதுவும்
மீள்வாசிப்பில் கண்டுபிடிக்கப்பட்டதாம். அதை
நம் வாஸந்தி எல்லோர் பார்வைக்கும் கொண்டு
செல்கிறாராம். அது மட்டுமில்லை புக்கர் பரிசு
கிடைத்ததற்கு காரணமாக அவர் சொல்வது மிகவும்
ஆபாசமாக உள்ளது. அதுவும் அவர்
சொல்லவில்லயாம். கருணையில்லாமல் யாரோ
சொன்னதாக இவர் சொல்கிறார். யாரோ
சொல்லியிருந்தாலும் ஒரு பெண் எழுத்தாளரைப்
பற்றி இன்னொரு பெண் எழுத்தாளர் இப்படி
சொல்லலாமா? எழுத்தில் பெண்,ஆண் என்று
பிரித்து பார்ப்பது ஆணாதிக்கம் என அம்பு
தொடுக்கும் புரட்சிப் புயல்கள் இதற்கு
ஆட்சேபணை தெரிவிக்க நேரிட்டாலும்
பரவாயில்லை. அருந்ததி அடுத்த நாவலை
எழுதாதற்கு காரணத்தை இந்த கும்பல்
கண்டுபிடித்துள்ளதாகவும் சொல்கிறார்.
அதனாலேயே தன்னை ஒரு சமூகப் போராளியாக
இனம் காட்டிக்கொண்டு தனது அமெரிக்க
துவேஷப் பேச்சுக்களால் கட்டுரைகளால்
உலகத்தின் கவனத்தைப் பெறப்பார்க்கிறார்.
ஏழைகளின், பழங்குடிகளின் பங்காளி என்கிறப்
போர்வையில் உலவும் ஜனநாயக விரோதி.
பயங்கரவாதி என்று வசை மாறியாக
விமர்சனங்கள் தொடர்கின்றன. இந்த வரிகளில்
ஒரு செய்தி ஒளிந்திருப்பதாகவே எனக்குப்
படுகிறது.Enron எதிர்ப்பு நர்மதா நதி அணை
எதிர்ப்பு,பழங்குடியினருக்கு ஆதரவு,
மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவு இவைகள்தான்
அருந்ததியின் எழுத்து மீதான குற்றச்சாட்டுக்கு
உண்மையான காரணமோ என்ற கேள்வி
எழுவதை தடுக்க முடியவில்லை.
அருந்ததியின் இந்திய அரசாங்க எதிர்ப்பு
மற்றும் அமெரிக்க அரசாங்க எதிர்ப்பு
இவைகளைத் தாங்க முடியாத ஏதோ ஒரு
சக்தி இதன் பின்னாலிருக்கச் சாத்யமுண்டுதானே?
Theory of probability....
வாஸந்தி To kill a mockingbird ஐ படித்துவிட்டு
எழுதினார என்பது எனக்கு தெரியாது. ஆனால்
நான் படிக்கவில்லை.படிக்காமலே இவ்வளவா
என்ற கேள்வி எழுவது நியாயம் தான். தேடி
படித்து எழுதுவதற்கு சற்று
காலதாமதமாகிவிடலாம். சந்தேகத்தின் பெயரில்
ஆயிரம் குற்றவாளி தப்பித்துவிடலாம். ஆனால்
சந்தேகத்தின் பெயரில் ஒரு குற்றமற்றவர் கூட
தண்டிக்கப்படக் கூடாதென்பது பொது நியதிதானே?
மீண்டும் Theory of probability..
1968 ல் கீழவெண்மணியில் தீவைத்துக்
கொல்லப்பட்ட விவசாயிகளுக்காக இன்றும்
கண்ணீர் வடிக்கும் சிகப்புச் சிந்தனாவாதிகள்
2007 ல் நந்திகிராமத்தில் டாடாவுக்காக
விவசாயிகளின் மீது துப்பாக்கிச் சூடு
நடந்தபோது மேதாபட்கரையும்,அருந்ததிராயயும்
பாதிக்கப் பட்டவர்களை சந்திக்க அனுமதி தர
மறுத்த செய்தி இந்த நேரத்தில்
ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை.

"A novel of real ambition must invent
its own language,and this one does...."

- JOHN UPDIKE,THE NEW YORKER.
இது The God of small things பற்றி
அமெரிக்க பத்திரிக்கையில் வெளிவந்த குறிப்பு.

கடைசியாய் வாஸந்திக்கு ஒரு கேள்வி..
எழுத்தாளரின் ஒரே தகுதி
எழுதிக்கொண்ண்ண்ண்ண்டே இருப்பது மட்டும்தானா?

வெள்ளி, 25 ஜூன், 2010

கனவும் , கனவும்

இரவு
தன்
சிறகுகளை
மடித்துக்
கொண்டிருந்த
விடியலில்
கனவு காண்பதாக
கனவொன்று
கண்டேன்.
கனவில்
வந்த
நான்
கனவு
கண்ட
என்னைப்
போலில்லை
என்ற
பதட்டத்தில்
கனவு
உதறி
துயில்
கலைந்தேன்.

வியாழன், 24 ஜூன், 2010

மீண்டும் ஒரு

மற்றொரு பிலாக்கிலும்
எழுத ஆரம்பித்துள்ளேன்.
தங்களின் வருகைக்கும்
வாசிப்புக்கும் கீழே :

http://thejushivan.blogspot.com

திங்கள், 21 ஜூன், 2010

மேலும் சில

வெள்ளமெனப்
பெருகும்
குறுஞ்
செய்திகளில்
தேடிக்
கொண்டிருக்கிறேன்
நீ
சொல்லாமல்
விட்ட
ஒரு
செய்தியை.

*************************

கைமறதியாய்
வைத்த
மூக்குக்
கண்ணாடியைத்
தேடும்
முதியவரைப்
போல்
உள்ளுக்குள்
அலைகிறது
ஒரு
கவிதை.

************************

பாலத்தினடியில்
தவித்து
நிற்கும்
நதியின்
விசும்பலில்
உறைகிறது
ஒரு
வரலாற்றுத்
துக்கம்.

************************

சாணை
தீட்டி
தீட்டி
நீ
பிரயோகித்த
வார்த்தைதகளால்
தாக்குண்டு
வீழ்கிறது
நமக்கான
சம்பாஷணை.

வியாழன், 17 ஜூன், 2010

கொஞ்சம் கவிதைகள்

வனம் புகும்
ஆசைக்கான
திரி தூண்டல்
ஓர் ஓக் மரத்தின்
காற்றுக்கான
எதிர்வினையின்
போது
நிகழ்ந்திருக்கலாம்.

*********************

பூனை
தடம் பதிக்கும்
மெல்லொலி
கேட்டு
கண்
விழிக்கிறதென் கனவு.

**********************

தயவு செய்து
நிறுத்துங்கள்
நிரம்பி
வழிகிறதென்
கோப்பை.

திங்கள், 14 ஜூன், 2010

கதம்பம்

சமீபத்தில் விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம்
தகர்க்கப்பட்டதன் பின்னணியில் உள்ள அரசியல்
மற்றும் யூகங்களை சற்று ஒதுக்கி விட்டு உடனடியாக
நாம் செய்ய வேண்டியது ஒன்று உள்ளது.
சேலம்-சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் Guard
திரு.ராஜசேகரனுக்கு நம் நன்றிகளையும்
பாராட்டுதல்களையும் தெரிவிப்போம்.
அவரது மதியூக செயல்பாட்டினால் ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் உயிர் பிழைத்தனர்.
தவறுகளையே சுட்டிக் காட்டும் ஊடகங்கள்
தவறுகளைத் தடுப்பவர்களை முன்னிலைப்
படுத்த வேண்டும்.
************************************

மூன்று நாட்களுக்கு முன் எங்கள் அலுவலகத்தில்
தற்காலிக ஊழியராக வேலை பார்த்த ரஜினி
என்ற இளைஞன் இரு சக்கர வாகன விபத்தில்
உயிரிழந்தார். எப்போதும் சிரித்த முகத்துடன்
எதிர்படும் அந்த இளைஞரின் வண்ன மயமானக்
கனவுகள் அனைத்தும் ஒற்றை நொடியில்
முரட்டு சக்கரங்களுக்கிடையே சிதைந்து போயின.
யோசித்து பார்க்கும் போது நகரத்துக்கு வெளியேதான்
நிறைய இரு சக்கர வாகன விபத்துகள் நடக்கின்றன.
கையில் வண்டி இருக்கு. பஸ் பிடித்துப் போக
வேண்டிய தேவையில்லை என்ற பொது புத்தியைத்
தள்ளி வைத்து விட்டு நகரத்துக்குள்ளாக மட்டுமே
ஓட்டினால் ஓரளவுக்கு விபத்துக்களைத் தவிர்க்கலாம்.
*****************************************************

திரு.கலாநிதி மாறன் ஸ்பைஸ் ஜெட் என்னும்
விமானக் கம்பெனியை வாங்கியுள்ளதாக தகவல்
வந்துள்ளது. ஆயிரத்து இரு நூற்று இருபது கோடி
ரூபாய் கொடுத்துள்ளதாகவும். சன் டிவி சீரியல்களைப்
பார்த்து நம் மக்கள் சிந்திய கண்ணிர்த்துளிகள்
பெரு வெள்ளமாய் பெருகியுள்ளதற்கு இதைவிட
பெரிய சாட்சி வேண்டுமா என்ன?
******************************************************

அயல் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியத்
தேர்தலில் ஓட்டு அளிப்பதற்கான உரிமை
அளிப்பதற்கான முயற்சி இறுதி வடிவத்தை
அடைந்துள்ளது. ஓட்டு போடாமல் சித்தாந்தம் பேசும்
உள்நாட்டு இந்தியர்கள் முகத்தில் அயல் தேச இந்தியர்கள்
கரி பூசுவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

ஞாயிறு, 13 ஜூன், 2010

எசப்பாட்டு

படுகொலை
செய்யப்பட்ட
மரங்களின்
சமாதிகளின்
மீதேறி
புகை கக்கி
விரையும்
நம்மையும்
மன்னிக்கிறது
இயற்கையின்
பெருங்கருணை.

நதியெனப்படுவது
குடிக்க
குளிக்க
பயிர் செழிக்க
என்பது மருவி
கழிவுநீர்
கலக்க
என்பதாய்..

கடலிலிருந்து
மீனவனை
விரட்ட
ஒரு திட்டம்.
மலையிலிருந்து
பழங்குடியினனை
விரட்ட
ஒரு திட்டம்.
அரசு
ஐந்தாண்டு
திட்டமிடட்டும்.
நாம்
மாறுதலுக்கு
அம்பானியை
பிரதமராகவும்
டாட்டாவை
ஜனாதிபதியாகவும்
ஆக்கி
அழகுபார்க்க
திட்டமிடுவோம்
அரசு சார்பில்.

சிகப்பு
வெள்ளை
பச்சை
கருப்பு
மஞ்சள்
காவி
நீலம்
கட்சிக்
கொடிகள்
தீற்றிக்
கொண்டபின்
எல்லா
வர்ணங்களும்
ஒன்றுதானோ?

திங்கள், 7 ஜூன், 2010

முகத்தில் அடித்த அறை


காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு:
-----------------------------------
படத்தில் உள்ள நபர் பெயர் : வாரன் ஆண்டர்சன்
முந்தைய தொழில் : சேர்மன்,யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன்

கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து கீழ்கண்ட பரிசுகள்
கிடைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று நம்பப் படுகிறது:

1. நூறு கசையடி
2. தேசிய விரோதி பட்டம்
3. இந்திய குடிமை உரிமப் பறிப்பு

மிக நீண்ட 26 வருடங்களுக்குப் பிறகு போபால் விஷ வாயு வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.
இரண்டு வருட சிறை.
ரூபாய் 25000 செலுத்தி ஜாமீனில் விடுதலை.

குறந்த பட்சம் 15000 உயிர்கள் பலி.
லட்சக்கணக்கில் பாதிக்கப் பட்டோர்.
தலைமுறையாய் தொடரும் பாதிப்பு.

இதற்கான விலை இதுதான்.

இந்தத் தீர்ப்பு நீதி துறையின் முகத்தில் அடிக்கப்பட்ட அறை என்று இந்திய தேசிய மாதர்
சம்மேளனம் தெரிவித்துள்ளது.

முகத்தில் விழுந்த அறை மட்டுமல்ல.
இதயத்தில் விழுந்த கத்திக் குத்து.

பின் குறிப்பு :
கோபத்திலோ அல்லது தற்காப்புக்காகவோ ஒரு ஆளைக் கொன்றால்
அதற்கான தண்டனை ஆயுள் தண்டனையாகவோ அல்லது மரண
தண்டனையாகவோ இருக்கலா.

அக்கறையின்மையால் லட்சக் கணக்கில் ஆட்கள் கொல்லப்பட்டாலும்
அதற்கான அதிகபட்ச தண்டனை இரண்ண்டு ஆண்டுகள் தண்டனை
மற்றும் அபராதம்.

பாரத தேசம் என்று கும்மியடி.

ஞாயிறு, 30 மே, 2010

வர்ண பேதம்

தவறுவதில்லை.
ஏழுமலையானுக்கு
லட்டு.
பழனியாண்டவனுக்கு
பஞ்சாமிர்தம்.
குழலூதுபவனுக்கு
வெண்ணெய்யும்,சீடையும்.
ஆற்றங்கரை நேசனுக்கு
கொலுக்கட்டை.
கருவேலமரக்
காட்டில்
மீசை முறுக்கி
அரிவாள்
தூக்கினவருக்கு
கண்ணில்
காட்டவேயில்லை
கள் கலயம்
கொஞ்சம்
சுருட்டுகள்
நீர் தெளிக்க
தலை
சிலுப்பும்
ஒரு கிடா.

ஒரு கப் zen

வாள் வித்தை
பயில
வந்தவரிடம்
தேநீர்
ஆற்றச்
சொன்னதாய்
ஒரு Zen.

கிழிபடாமல்
நீளமாய்
தேநீர்
ஆற்றும்
கடைகாரருக்கு
அந்த zen
குறித்த
அபிப்ராயம்
யாதாயிருக்கும்
என்ற
சிந்தனையோடு
ஆரம்பமாகிறதென்
நாள்.

மற்றுமொரு செய்தி


குழல்
பறக்க
மின்மினிகளை
துரத்திக் கொண்டு
ஓடுபவளின்
உள்ளங்கை
வெதுவெதுப்பில்
பதுங்கிகொள்ள
நட்சத்திரங்கள்
விருப்பம்
தெரிவித்திருப்பதாய்
செய்தியொன்று
வந்தது
நேற்றைய
கனவில்.

செவ்வாய், 25 மே, 2010

முடிவல்ல ஆரம்பம்

இன்னும் சிறிது நேரத்தில்
பத்தாம் வகுப்பு தேர்வு
முடிவு வரப் போகிறது.
வென்றவர்களுக்கு
வாழ்த்துக்கள்.
வெற்றி பெற
இயலாதவர்களுக்கு
நம்பிக்கை.
தோல்வி என்பது
வெற்றியின் குழந்தைப் பருவம்.
பெற்றொர்களுக்கு ஓர் வேண்டுகோள்:
மதிப்பெண் அடிப்படையில்
உங்கள் குழந்தைகளை
அணுகாதீர்கள்.

Chetanbhagat


Tolstoy
Dostovesky
Kafka
Marquez
Orhan Pamuk
எனத்
தீவிரமாய் வாசிப்பவர்களும்
சேத்தன்பகத்தை
வாசிக்கலாம்.

Tagore
R.K.Narayan
Khushwant
Naipal
Rushdie
Amitav Ghosh
Anitha Desai
Vikram Seth
Arunthathi
Jumba Lahiri
Kiran Desai
என்ற வரிசையில்
Chetan Bhagat க்கும்
இடமுண்டு.

the 3 mistakes of my life.

வியாபாரம்
கிரிக்கெட்
மதம் எனத்
தனித் தனி நோக்கங்கள் கொண்ட
மூன்று குஜராத்தி இளைஞர்கள்
மற்றும் ஒரு இஸ்லாமியச் சிறுவன்
இவர்களைப் பற்றிய கதை.
கோத்ரா ரயில் எரிப்பு அதன் பின்
நடந்த படுகொலைகள்.
இந்தப் பின்னணியில் கதை.
எளிய நடை.
மெலிதான நகைச்சுவை.
குறைந்த விலையில்
Rupa & Co வெளியிட்டுள்ளார்கள்.
இது பகத்தின் மூன்றாவது நாவல்.
முதல் நாவல் Five point someone.
அனைவரும் அறிந்ததே.
ஆம்.
3 Idiots ன் வேர்.

திங்கள், 24 மே, 2010

சேர்ந்திசை


எவரோ
எழுதிய
இசைக்
குறியீடுகளுக்கு
உயிர்
கொடுக்கும்
இசை நடத்துனரின்
கையிலிருக்கும்
மந்திரக்கோல்
போல்
இடவலமாய்
அசைந்து
கொண்டிருக்கிறது
மூங்கில் மரங்கள்.

மறதி


எதிர்
ஜன்னலில்
விரையும்
முகங்களைப்
போல்
ஞாபக
விளிம்பிலிருந்து
நழுவுகின்றன
நேற்றைய
கனவில்
கேட்ட
இசையின்
வடிவங்கள்.

புதன், 19 மே, 2010

துயருறும் இசை


விரல்களின்
ஸ்பர்சம்
மறந்து
தூசிபடர்ந்த
பியானோவின்
மெளன
விசும்பல்
கேட்டு
வந்தமர்ந்த
வண்ணத்துப்பூச்சியின்
காலடிதடத்தைப்
பற்றிக்கொண்டு
மேலெழும்புகிறது
மெலிதான
சங்கீதம்.

மின் மினிகள்


அறை
நிரம்பி
வழிகிறது
பரிசு
பொருட்களால்.
ஐந்து
புகைப்பட சட்டங்கள்.
நான்கு
சுவர்க்கடிகாரங்கள்.
மூன்று
தேநீர்க்கோப்பை
தொகுதிகள்.
இரண்டு
இரவு விளக்குகள்.
ஒரு
குடிநீர் வடிகட்டி.
இன்ன பிற
பொருட்குவியலின்
நடுவே
காணக்
கிடைக்கவில்லை
குழந்தையின்
புன்னகையையொத்த
ஒரு புத்தகம்.

உனக்கும் அமிழ்தென்று பெயரா ?


நீ
உன் பெயரை
சொல்லியிருக்கலாம்.
அதன்
காலடித்தடம்
என் மனசுக்குள்
பதியாமல் கூட
போயிருக்கலாம்.
சொல்லாததால்
ஆங்கில
திரைப்படத்தின்
இறுதியில்
திரையில்
ஓடும்
பெயர்களைப் போல்
ஓடுகின்றன
மனசுக்குள்
உனை
அழைப்பதற்கான
பெயர்கள்.

வளர்ப்பு


சங்கிலியில்
பிணைத்து
ஆட்களை
இழுத்துக்கொண்டு
ஓடும்
உயர் ஜாதி நாய்களை
வளர்த்ததில்லை.
அடுப்பில்
கொதிக்கும்
மீன் வாசத்துக்காய்
கால்களை
சுற்றிவரும்
பூனைகளை
வளர்த்ததில்லை.
சமுத்திரக்
கனவுகளுடன்
கண்ணாடித் தொட்டியில்
நீந்திக்கொண்டிருக்கும்
தங்க மீன்களை
வளர்த்ததில்லை.
ஆகாயம் நோக்கி
வீசியெறிந்தும்
வட்டமிட்டு
கீழிறிங்கி
தோளில் அமரும்
புறாக்களை
வளர்த்ததில்லை.
இழந்த ஆகாயத்தை
கூண்டுக்குள் தேடி
பரிதவிக்கும்
காதற்கிளிகளை
வளர்த்ததில்லை.
எனினும்
வளர்கிறது
ஒரு மிருகம்
மனசுக்குள்.

செவ்வாய், 18 மே, 2010

T200


+2 தேர்வு முடிவு வெளியாகி
விட்டது.
மதிப்பெண் பட்டியலை
வைத்துக் கொண்டு
வீதிக்கு இரு பெற்றோர்கள்
புலம்பிக் கொண்டு
நிற்கிறார்கள்.
சிலபஸுக்கு வெளிய கேள்வி
கேட்டுட்டாங்க.
தப்பான கணக்கு கேட்டுட்டாங்க.
அந்த ஊர் டீச்சர் ஸ்ட்ரிக்டாத்
திருத்திட்டாங்க.
CEO ஆபிஸ் வாசலில்
நீளமான க்யூ.
நிழல் அச்சுத் தாளை
வாங்குவதற்கு.
மறு பக்கம்.
தனியார் பொறியியல்
கல்லூரியின் அட்டகாசம்.
அப்ளிகேஷன் குறைந்த பட்சம்
500 ரூபாய்.
டிசிஎஸ் ல கூப்டாக..
விப்ரோ ல கூப்டாக..
இன்ஃஃபோசிஸ் ல கூப்டாக..
இப்படி தப்பாட்டம் வேற.
தாய்மார்களே..
தந்தைமார்களே...
உங்கள் குழந்தையின்
மனசோடு பேசி
முடிவெடுங்கள்.
ஆகாசம் அளவு
வாய்ப்புகள் உள்ளன.

திங்கள், 17 மே, 2010

காதல் கொடி ஏற்றி


நீருள்
மூழ்க
மறுக்கும்
பலூன்
போல்
திமிறிக்
கொண்டு
கிளம்புகின்றன
நம்
காதல்
ஞாபகங்கள்
நம்
மகளின்
திருமணநிகழ்ச்சி
நிரல்களில்
ஒன்றாய்.

அற்புத விளக்கு


அலாவுதீனுக்குக்
கிடைத்தது போல்
எனக்கும்
கிடைத்தது
ஓர்
அற்புத விளக்கு.
தன்னையேத்
தேய்த்து
தேய்த்து
கவிதையாய்க்
கொட்டும்
அற்புத விளக்கெனில்
யாவர்க்கும்
விளங்குமோ?

உணர்தலின் வாசல்



கடவுள்
இருக்கிறாரா
இல்லையா.
நண்பர்
கேட்டார்.
கடவுளிடமேக்
கேளும்
என்றேன்.
கேட்டாரா
இல்லயாத்
தெரியவில்லை.
அதன் பின்
என்னிடம்
கேட்கவில்லை
அக்கேள்வியை.

ஞாயிறு, 16 மே, 2010

விரும்பிப் பார்த்தது


பிடித்த பத்துப் படங்கள் ;

01. உன்னைப் போல் ஒருவன்
இயக்கம் : ஜெயகாந்தன்

02. அழியாதக் கோலங்கள்
இயக்கம் : பாலு மகேந்திரா

03. உதிரிப் பூக்கள்
இயக்கம் : மகேந்திரன்

04. அவள் அப்படித்தான்
இயக்கம் : ருத்ரைய்யா

05. தண்ணீர்.. தண்ணீர்
இயக்கம் : பாலச்சந்தர்

06. ஒரு இந்தியக் கனவு
இயக்கம் : கோமல் சாமிநாதன்

07. பதினாறு வயதினிலே
இயக்கம் : பாரதி ராஜா

08. இருவர்
இயக்கம் : மணிரத்னம்

09. இயற்கை
இயக்கம் : ஜனநாதன்

10. பசங்க
இயக்கம் : பாண்டிராஜன்

பிடிமானம்


ஆசையைத் துற.
புத்தனின்
கோட்பாட்டை
வழுக்குப் பாறையில்
ஏறிக்கொண்டிருக்கும்
என்னிடம்
போதிக்காதே.
விழுந்தால்
சாஸ்திரத்துக்குக்
கூட
ஓர் எலும்பு
மிஞ்சாது.
ஏறிக்
கொண்டிருக்கிறேன்
உயிர்
மீதான
ஆசையை
இறுகப்
பற்றிக் கொண்டு.

கண்மணி.....


பாறையாய்
கனக்கும்
உன்
மெளனத்தை
உருட்டிவிடு.
அதனடியில்
தான்
என்
நேச விதைகளைத்
தூவியிருக்கிறேன்.

அட்சயத் திரிதை


எம்
பள்ளிகளும்
ஜ்வலிக்கும்
நகைக் கூடங்கள்
தான்.
இங்கே
செய் கூலியும்
அதிகம்.
சேதாரமும்
அதிகம்.

வியாழன், 13 மே, 2010

அலைபேசி வழி மரணம்




மியாமி யுனிவர்சிட்டி மருத்துவமனை செய்தி :
சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்த
செல்போனில் கால் வந்ததும்
பேசமுயன்ற ஓர் இளஞரின்
செல் வெடித்து சிதறியிருக்கிறது.
சிகிச்சையையும் மீறி
மரணமடைந்துள்ளார்.
இந்த செய்தி உங்களுக்கு
மட்டுமல்ல.
நம்மைச் சுற்றியுள்ள
அனவருக்கும்.