செவ்வாய், 27 ஜூலை, 2010

அலுவலகத்தில் அம்மா



ஒவ்வொரு
தொலைபேசி
அழைப்பிற்கும்
சுரக்கின்றன
மார்புகள்.

*******************

பள்ளிக்கு
அனுப்பிய
குழந்தையின்
ஞாபகத்தில்
சோறிடுகிறாள்
அலுவலக
ஜன்னலில்
துள்ளி
விளையாடும்
அணிலுக்கு.

******************

ஞாயிறு
வரை
பொறுத்திரு
கண்ணே.
முத்த மழை
பொழிந்து
கொள்ளலாம்.

வெள்ளி, 23 ஜூலை, 2010

ஒரு திரைக்கதையாசிரியனைக் குறித்து



லோகி (நினைவுகள்- மதிப்பீடுகள்)

மலையாளத் திரையுலகத்தின் மிக வசீகரமான திரைக்கதையாசிரியர்களில் ஒருவரான
லோகி என்கிற ஏ.கே.லோகிததாஸ் குறித்து ஜெயமோகன் எழுதியுள்ளார்.
படிக்கும் போதெ மலயாளத் திரையுலகம் குறித்து பொறாமை எழுவதைத் தடுக்க
முடியவில்லை.கதை,திரைக்கதையாசிரியருக்கு இயக்குனருக்கு நிகரான அந்தஸ்து.
தனியாவர்த்தனம்,கிரீடம்,ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா,பரதம்,அமரம்,
தூவல் கொட்டரம் எனச் சொல்லிக் கொண்டெ போகலாம். அத்தனைக்கும் கதை,
திரைக் கதை லோகியே. கிட்டதட்ட அறுபதுக்கு மேற்பட்ட பிரபலமான படங்களுக்கு
கதையால் உயிர் கொடுத்தவர். மிகச் சிறந்த படங்களையும் இயக்கியுள்ளார்.
இந்த நேரத்தில் நம் தமிழ் படங்கள் ஞாபகத்திற்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.
இலக்கியவாதிகளை அங்கீகரிக்காத உலகம் அது. மிகச் சொற்பமான படங்களே
நாவல்களைத் தழுவி வந்துள்ளது. ஜெயகாந்தன்,மகேந்திரன் முக்கியமானவர்கள்.
மற்றபடி இங்கே கதை என்பது ஒரு கும்பலால் உருவாக்கப் படுகிறது இயக்குனருக்காக.
மலிவான விலையில் கிடைக்கும் டிவிடிக்கள் புண்ணியத்திலும் கதைகள்
உருவாக்கப் படுகின்றன. எஸ்.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் கொஞ்சம்
முயற்சிக்கிறார்கள். நம்மிடம் மிகச் சிறந்த கதைகளும்,கதையாசிரியர்களுமுண்டு.
அவர்களைப் பயன் படுத்திக் கொண்டால் நடிகர்கள் பின்னால் போய் தலையில்
துண்டு போட்டுக் கொள்ள அவசியம் ஏற்படாது. ஒளிப்பதிவாளர்கள்,இசையமைப்பாளர்கள்,
பாடலாசிரியர்கள் இவர்களை விட கதையாசிரியர்கள் சிறந்த படத்துக்கான ஆணிவேராய்
இருக்கக் கூடியவர்கள். இலக்கியவாதிகளின்றி இனி திரைஉலகம் இல்லை
என்ற நிலை வரவேண்டும்.
வரும்.
காத்திருப்போம்.

ஞாயிறு, 18 ஜூலை, 2010

ஒன்று , இரண்டு , மூன்று


குல்மொஹர்
உதிர்க்கும்
தீத்துளிகளில்
குளிர்காய்ந்து
கொண்டிருக்கிறது
தகிக்கும்
என் காதல்.


வேட்டையாடிய
மிருகத்தின்
பக்கத்தில்
நின்று
புகைப்படம்
எடுத்துக்
கொள்பவனை
நினைவூட்டுகிறாய்
என்று
சொல்லிப் போனான்
வென்ற காதலை
மணமுடித்த
அன்று.



சுவரிலிட்ட
குழந்தையின்
கிறுக்கல்களில்
தேடினால்
கிடைக்கக் கூடும்
கடவுளின்
கையொப்பம்.

புதன், 14 ஜூலை, 2010

சோளகர் தொட்டி


மிகவும் தாமதமாகத்தான் ராவணன் பார்த்தேன்.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு கேனத்தனமானப் படம்.
புறங்கையால் தள்ள வேண்டிய படம்.
அவ்வளவே. இதுக்கா பதிவுலகில் இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள்.
ஒருவர் மணிரத்னம் அம்பானியின் அடிவருடி என்கிறார்.
மற்றொருவர் அரசாங்கத்தின் கைக்கூலி என்கிறார்.
பிறிதொருவரோ பார்ப்பன சதி என்கிறார்.
இந்தச் சமயத்தில் “ சோளகர் தொட்டி” ஐ நினைவு கூர்கிறேன்.
நீண்ட காலமாக மனித உரிமைச் செயல்பாடுகளில் தொடர்புடையவரான வழக்கறிஞர் ச.பாலமுருகன் எழுதியுள்ள நாவலே சோளகர் தொட்டி. இதனை நாவல் வடிவத்தில்
அமைந்த பழங்குடி மக்களின் வாழ்க்கை தொடர்பான ஒரு வரலாற்றுப் பதிவு என்றும் சொல்லலாம்.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படை வனதேவதையின் குழந்தைகளாகிய
மலைவாழ் மக்களிடம் நடத்திய கொடூரங்களைப் பற்றி சொல்கிறார்.

’’எங்கேடி உன் புருஷன்? '' என்றான் அதிகாரி.

''தெரியாதுங்க''

''இவளுக்கும் கரண்ட் கொடுங்க'' என்று உத்தரவிட்டான். அவள் அச்சத்தில் பின்னே நகரும்போது போலீஸ்காரன் மெக்கர்பெட்டியிலிருந்து மின் ஒயரை எடுத்து அவன் முன்னே வந்தான். பின்னே நகர்ந்தவள் சுவர் முட்டி நின்றாள். அவளது காதுகளில்இரண்டு கிளிப்புகளும் அவளின் மார்புக் காம்புகளில் இரண்டும், பிறப்பு உறுப்பில் ஒன்றும் மாட்டப்பட்டது. மாதி கையெடுத்துக்கும்பிட்டாள். பலனில்லை. போலீஸ்காரன் மெக்கர் பெட்டியின் கைப்பிடியை நான்கு சுற்று சுற்றினான். பின் அதன் கருப்பு நிறப்பொத்தானை அழுத்தினான்.

''அட சாமி'' என அவள் அறை முழுவதும் திக்கற்று ஓடினாள். மீண்டும் மெக்கர் பெட்டியின் சுழலும் கைப்பிடி சுற்றப்பட்டது.அவள் பள்ளத்தில் வீழ்வது போல் உணர்வு கொண்டாள். மீண்டும் சுற்றப்பட்டது. அவள் தன் உடலில் நரம்புகள் ஆங்காங்கேதலை முதல் பாதம் வரை வெடித்துச் சிதறச் செய்யுமளவு வலியையும் அதிர்வையும் அனுபவித்துத் தரையில் விழுந்தாள்.

கண்ணீர் சிந்தாமல் இதனைப் படிக்க முடியாது.
அனைவரும் படிக்க வேண்டிய நாவல் இது.

ஆசிரியர் - ச.பாலமுருகன், வனம் வெளியீடு, 17, பாவடித் தெரு, பவானி - 638301.

பின் குறிப்பு : வீரப்பனை அழித்தாகி விட்டது. விருதுகளும் பெற்றாகிவிட்டது.
இருவருக்குமிடையே பாதிக்கப் பட்ட மக்களுக்கு..?
கேள்விக் குறிகளுக்கு நம் தேசத்தில் பஞ்சமில்லை.

திங்கள், 12 ஜூலை, 2010

குழந்தைகள் வாழ்க



நண்பர் அஹமத் இர்ஷாத் என்னை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்திருந்தார்.
உபரியாய் ஒரு சுதந்திரமும் கொடுத்திருந்தார். எந்த தலைப்பில் வேண்டுமானாலும்
எழுதலாம். நன்றி இர்ஷாத்.
என்னை மிக மிக கவர்ந்த ஒரு புத்தகம்.
"குழந்தைகள் வாழ்க".
இது ஒரு மாஸ்கோ பதிப்பக நூல்.
ஷ.அமனஷ்வீலி எழுதியது.
அமனஷ்வீலி சோவியத் விஞ்ஞானி,மனோதத்துவ டாக்டர்,பேராசிரியர்.
முதன் முதலில் பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தரும்
முறைகளையும்,வழிகளையும் பற்றி இந்நூலில் எழுதியுள்ளார்.
இந்நூலில் வரும் முதல் வகுப்பு ஆசிரியர் தன் வகுப்பில் சேர வரும் குழந்தைகளுக்கு
பள்ளி திறக்கும் முன்பாகவே அவர்களை வரவேற்று ஒரு கடிதம் எழுதுகிறார் வாழ்த்து
அட்டையுடன்.
அவர்கள் வருவதற்கு முன்னதாகவே அக் குழந்தைகளின் பெயர்,அவ்ர்களின்
குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய தகவல், குழந்தைகளுக்குப் பிடித்த விளையாட்டு
இது மாதிரியான தகவல்கள் அனைத்தையும் சேகரித்து விடுகிறார்.
முதல் நாள் ஒவ்வொரு குழந்தையின் பெயர் சொல்லி அழைத்து
பரிசு பொருட்கள் வழங்குகிறார்.
அட்டைகள்,படங்கள்,சின்னச் சின்ன பொருட்கள் இவைகள் தான்
பாடத்தின் கரு.
குழந்தைகள் பாடுகின்றன.. ஆடுகின்றன.. விளையாடுகின்றன..
வாரம் ஒரு முறை ஒவ்வொரு குழந்தையின் வீட்டிலிருந்தும் ஒருவர்
விருந்தினராக அழைக்கப் படுகிறார். ஒரு விருந்தினர் கதை சொல்கிறார்.
மற்றவர் பாடிக்காண்பிக்கிறார்.இன்னொருவர் மேஜிக் செய்து காட்டுகிறார்.
குழந்தைகள் ஆளுக்கு ஒரு புத்ததகம் தயாரிக்கிறார்கள். அவரவர்க்குப்
பிடித்த படங்களை ஒட்டி. அந்தப் புத்தகங்களை வைத்து ஒரு சின்னஞ்சிறு
நூலகம். ஒருவர் மற்றவருக்கு உதவுவது முக்கியமான பாடம்.
இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.
ஆசிரியர் ஒரு பட்டியல் போடுகிறார்.

ஆசிரியரின் கட்டளைகள்,ஏவல்கள்களை உடனடியாக நிறைவேற்றுமாறு
குழந்தைகளைக் கட்டாயப்படுத்தலாமா? - கூடாது.
கட்டாய வீட்டுப் பாடங்களைத் தரலாமா? - கூடாது.
குழந்தைகளுக்கு மதிப்பெண்களைப் போடலாமா? - கூடாது.
வகுப்பில் யார் மற்றவரை விட நன்றாகப் படிக்கின்றனர் என்று
சொல்லலாமா? - கூடாது.
வகுப்பில் குழந்தைகள் கைகளைக் கட்டிக் கொண்டு உட்காரவேண்டும்
என்று சொல்லலாமா?- கூடாது.
குழந்தை வகுப்புக்குக் கொண்டு வந்த விளையாட்டு சாமானைப்
பிடுங்கலாமா? - கூடாது.
குழந்தையைப் பெயில் செய்யலாமா? - கூடாது.
சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டுமென குழந்தைகளிடம்
சொல்லலாமா? - கூடாது.
இந்தக் கூடாது வகையறாக்களைத் தான் நம் பள்ளிகள்
செய்து கொண்டிருக்கின்றன.
இதை நாமும் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம்.
கொஞ்சம் யோசிப்போம்.

வியாழன், 8 ஜூலை, 2010

இன்றைய கேள்விகள்

1. திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இலங்கைக்குச்
செல்லக் கூடாதென தடை விதித்தவர்கள் கிரிக்கெட்
விளையாடச் செல்பவர்களுக்கு என்ன அறிவுறுத்தப்
போகிறார்கள்?

2. திரைப்படத்தின் ஆணி வேர் கதை என்று படம்
பார்ப்பவர்களுக்கேத் தெரிந்திருக்கும் போது
டைரக்டர்கள் கதையை விடுத்து கதாநாயகர்கள்
பின் ஓடுவது ஏன்?

3. ஆண்டர்சனை தப்பிக்க விட்டவர்கள் அப்சலையும்
கஸாப்பையும் தண்டிக்கத் துடிக்கும் காரணம் என்ன
என்று அரசாங்கத்தைக் கேள்வி கேட்பவர்களின்
உள் நோக்கம் தான் என்ன?

4. ஒரு சித்தாந்தத்தை தழுவிக் கொண்ட அறிவுஜீவிகள்
தலைமை தவறு செய்தாலும் எதிர் கேள்வி
கேட்காதது ஏன்?

5. ஆர்.டி.ஓ மற்றும் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில்
உபரித் தொகை கொடுக்காமல் வேலை
நடக்குமா?

பி.கு : அரசாங்கத்தைக் குறித்து ஒரு கேள்வி கூட
இல்லையே என்று ஆதங்கம் வேண்டாம்.
எது மாறக் கூடும் என்ற நம்பிக்கை
உள்ளதோ அதை பற்றி மட்டும் தான் கேள்வி.
இது இருண்மை சிந்தனை என்று எதிர்வினை
வரினும் பதிலில் மாற்றமில்லை.

ஞாயிறு, 4 ஜூலை, 2010

தங்க மகன் விருது



" யாவரும் நலம்” சுசி அவர்கள் எனக்கு இந்த விருதைத் தந்துள்ளார்கள்.
அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விருதை நான் ரசித்த பதிவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த
சந்தோஷமடைகிறேன்.

சுந்தர்ஜிபிரகாஷ் - குற்றாலச் சாரலில் நனையும் அனுபவத்தைக் கொடுக்கும்
இவரது கவிதை மனசுக்காக.

ஹரணி - இலக்கியத்தில் மட்டுமல்ல அனைத்திலும் என் கூட வரும்
பிரிய சிநேகிதனுக்காக.

ரிஷபன் - கதை,கவிதை,கட்டுரை,இணையம் என அனைத்திலும்
ஜ்வலிப்பதற்காக.

கமலேஷ் - இவரது வசீகரமான கவிதைகளுக்காக.

பாலாவின் பக்கங்கள்- இவரது நுட்பமான விமர்சனப் பார்வைக்காக.

சனி, 3 ஜூலை, 2010

காத்திருப்பு



நிலவு
பின்தொடர்வதாய்ச்
சொல்லி
கைகளை
இறுகப் பற்றி
இழுத்துப் போகும்
என் மகளின்
முதல் கவிதைக்காய்
காத்திருக்கின்றன
நான்
எழுதிய கவிதைகள்
அனைத்தும்.