புதன், 21 ஏப்ரல், 2010

பின் தொடரும் நிஜத்தின் குரல்




யார் நீ?

பரசுராமபுர அனந்தபத்மனாப வெங்கடேச பிரசன்ன பெருமாள்.

எந்த ப அ வெ பி பெருமாள்?

உனக்கு எத்தனை ப அ வெ பி பெருமாளைத் தெரியும்?

ஒரே ஒரு ஆள்.

அந்த ஆள் நாந்தான்னு வச்சுக்க.

சான்ஸே இல்லை.

அத விடு. நீ செய்யறது நல்லா இருக்கா?

என்ன?

உன் தொழில்?

அதுக்கென்ன?

அடப் பாவி. உயிருடன் விளையாடலாமா?

விதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக எவருக்கும்

மரணம் சாத்யமில்லை.

சாத்தான் வேதம் ஓதுகிறதா?

இல்லை. என் தொழிலை நான் செய்கிறேன்.

போலி மருந்து விற்பனை. இது ஒரு தொழிலா?

இங்கே அசல், போலி என்று எதுவுமில்லை.

மீண்டும் தத்துவமா?

அப்படித்தான் வைத்துக்கொள்.

நான் சொல்கிறேன். இப்போதாவது நிறுத்து.

முடியாது. நான் ரொம்ப தூரம் வந்து விட்டேன்.

சினிமா வசனம்.

ஆனால் உண்மை.

இதன் பின் விளைவுகளை யோசித்தாயா?

இது ஒரு தொடர் விளைவு. இதன் ஆரம்பத்தில்
உங்கள் அரசியல்வாதி பின் மருத்துவர்கள்
தொடர்ந்து மருத்துவமனைகள். நீண்டுகொண்டே
போகும்.உங்கள் உணவு,நீர்,காற்று. எல்லாமே
போலி அல்லது கலப்படம்தானே?

நியாயப்படுத்த முயற்சிக்காதே?

நியாயம் அல்லது அநியாயம் இவை ரெண்டுமே
Two sides of the coin.

உன் பெற்றோர்,உன் குழந்தைகள் இவர்களுக்கு
உன் மருந்து போய் சேர்ந்தால் என்னவாகும்?

சான்ஸே இல்லை. குப்பைத்தொட்டியில்
வீசியெறியப்பட்ட அநாதை நான். எனக்கு என்று
எவருமில்லை.

இதை இதைத்தான் நான் சொல்கிறேன். நீயே
ஒரு போலி. கலப்படம். அதனால் தான்
இத்தொழிலை தேர்ந்தெடுத்துள்ளாய்.

இல்லை.இல்லை.அப்படிச் சொல்லாதே.

அப்படித்தான் சொல்வேன்.

யார் நீ?

பரசுராமபுர அனந்தபத்னாப வெங்கடேச பிரசன்ன பெருமாள்.

தெரியலை.

இன்னும் தெரியலையா?

ம்ஹூம்.

நீதான் நான். நான் தான் நீ.

அய்யோ. தலை சுத்துதே.

சுத்தட்டும்.

சொல். யார் நீ?

உன் மனச்சாட்சி.

பரசுராமபுர அனந்தபத்மனாப வெங்கடேச பிரசன்ன பெருமாள் கனமான
பூ ஜாடியை தூக்கி தன் முன் இருந்த ஆளுயர நிலைக் கண்ணாடியை
நோக்கி எறிந்தான்.

1 கருத்து:

சுந்தர்ஜி சொன்னது…

நிஜம் சுட்ட-நெருக்கமான அதிர்வுகளை எழுப்பிய பதிவு.எது போலி எது நிஜம் வாழ்க்கையில்?தெரியலியேப்பா என்றுதான் சொல்லமுடிகிறது.